Also Watch
Read this
பதவியேற்ற சில நாட்களிலேயே 717 மதுபானக்கடைகள் மூடப்பட்டதை எண்ணி, "அப்பாடா" என பெண்கள் பெருமூச்சுவிட்ட நிலையில் அண்டை மாநிலங்களை போன்று, ரெஸ்டோ பார்களை விரிவுபடுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதுபோல் குறைத்து, வருமானத்தை வேறுவழியில் அதிகரிப்பதற்கான திட்டம்தான் ரெஸ்டோ பார் விரிவாக்கம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர்களின் கேள்வி
டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு, குளுகுளு ரெஸ்டோ பார்களை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ள நிலையில், அப்படி செய்தால் மட்டும் குடிகாரர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுமா? படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன? போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? எல்லா கணக்கும் ஒன்றுதானே? என்பதே சமூகஆர்வலர்களின் கேள்வி.

ரெஸ்டோ-பார் விரிவுபடுத்துதல் திட்டம்
தமிழகத்தில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், அதன்மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருமானமும் கொட்டுகிறது. இந்நிலையில், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகில் இருக்கக்கூடிய 717 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா கண்டது தவெக அரசு.

இந்த அதிரடி ஆக்சனைக் கண்டு இல்லத்தரசிகளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. ஆனால், இந்த பக்கம் கொடுத்து அந்த பக்கம் வாங்குவது போன்று அடுத்தகட்டமாக புதிய திட்டத்தை அரசு கையில் எடுக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதுதான் ரெஸ்டோ-பார் விரிவுபடுத்துதல் திட்டம்.

விதிமுறைகளுக்கு மாறாக...
ஏற்கனவே கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ரெஸ்டோ-பார்கள் குவிந்து கிடப்பதுபோன்று தமிழ்நாட்டிலும் உணவகத்துடன் கூடிய மதுபான கூடத்திற்கு அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம்.

அதோடு, FL2, FL3 மனமகிழ் மன்றங்களுக்கு மதிப்பு கூட்டு வரி இல்லாததால், மதிப்பு கூட்டு வரியுடன் கூடிய ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கி அரசின் வருவாயை ஏகபோகமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாம். இதன் மூலம் அரசுக்கு 14.5 சதவீதம் முதல் 58 சதவீதம்வரை மதிப்புக்கூட்டு வரி கிடைக்குமாம்.

இந்த திட்டமும், லாபக்கணக்கும் ஒருபக்கம் இருந்தாலும் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் விதிமுறைகளுக்கு மாறாக தனியார் மதுவிற்பனை கூடங்கள் செயல்படுவதாகவும், அதற்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாகவும் ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் ரெஸ்டோ பார்களை விரிவுபடுத்தினால் அதுபோன்ற குற்றச்சாட்டுகள் மேலும் எழாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதான் கணக்கா?
மேலும், தமிழக அரசு டாஸ்மாக் எண்ணிக்கைகளை, மூடிவிட்டதாக ஒருபக்கம் கணக்கு காட்டிவிட்டு, மறுபக்கம் வேறுவழியில் அதனை ஈடுசெய்யும் வகையில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுத்து அதன் எண்ணிக்கையை கூட்டினால் மது நடமாட்டத்தை குறைப்பதாக எப்படி அர்த்தமாகும்? என கேள்வி எழுப்பும் பலர், அரசுக்கு வருமானம் வர வேண்டும், அதேநேரம் டாஸ்மாக் கடையை அரசு நடத்தவில்லை என்ற பழிச் சொல்லில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதுதான் கணக்கா? எனவும் கூறி வருகின்றனர்.