Also Watch
Read this
சென்னை திருவல்லிக்கேணியில் 11 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், மலேசியா வரை நீளும் சர்வதேச நெட்வொர்க்காக உருவெடுத்திருக்கிறது. கள்ள நோட்டை மாற்றிய டிராவல்ஸ் அதிபர், தஞ்சாவூர் விவசாயி என அடுத்தடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் போலீஸாருக்கு பெரும் சவாலாக இருக்கும் அந்த மர்ம பெண் யார்? சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் இந்த சர்வதேச கள்ள நோட்டு வழக்கின் பின்னணி என்ன?

கட்டுக்கட்டாக கள்ள நோட்டுக்கள்
திருச்சி ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசாருக்கு, திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதியில் பல லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைமாற போவதாக ஒரு டாப் சீக்ரெட் தகவல் கிடைத்தது. உஷாரான திருச்சி ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு டி.எஸ்.பி. செந்தில்குமார், உடனடியாக சென்னை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவுக்கு ரகசிய அலெர்ட் கொடுத்தார்.

உடனே களத்தில் இறங்கிய டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலையில் உள்ள ஒரு குறிப்பிட்ட விடுதிக்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கே சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு அறையை சோதனையிட்டபோது, அங்கு கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

யூரோ நோட்டுகள் பறிமுதல்
அங்கிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் சென்னை மண்ணடியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சபீக் ரஹ்மான் என்பது தெரியவந்தது. சபீக் ரஹ்மானை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 11 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் இந்திய நோட்டுகளும், அதுமட்டுமின்றி சர்வதேச பணமான 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 ஆயிரம் யூரோ நோட்டுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் விவசாயி வீட்டில்...
சபீக் ரஹ்மானிடம் திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இந்த கள்ள நோட்டுகளை சப்ளை செய்தது தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன் என்பது அம்பலமானது. உடனடியாக தனிப்படை போலீசார் தஞ்சாவூருக்கு விரைந்தனர். வெட்டிக்காடு பகுதியில் பதுங்கியிருந்த விவசாயி ரவிச்சந்திரனை அமுக்கிய போலீசார், அவரது வீட்டிலும் அதிரடி ரெய்டு நடத்தியதில், அங்கு 23 லட்சம் ரூபாய் நோட்டுகள், 4 பாஸ்போர்ட் மற்றும் 9 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மலேசியாவில் இருந்து...
சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ரவிச்சந்திரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வெளிவந்த உண்மைகள், சற்றே திடுக்கிட வைக்கிறது. விவசாயி ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் வேலை பார்த்துள்ளார். அப்போது, அங்கு கால் டாக்ஸி ஓட்டும் ஒரு கும்பலுடன் இவருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மலேசிய கும்பல் தான் சர்வதேச அளவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் மாஃபியா நெட்வொர்க். அவர்களிடம் கமிஷன் அடிப்படையில் டீல் பேசி, கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் கொண்டு வந்து விநியோகம் செய்யும் முக்கிய ஏஜென்டாக மாறியுள்ளார் இந்த ரவிச்சந்திரன்.

கள்ள நோட்டுகளுடன் மர்ம பெண்
அடிக்கடி சென்னை வரும்போது, டிராவல்ஸ் உரிமையாளர் சபீக் ரஹ்மானுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கூட்டாக சேர்ந்து சென்னையில் கள்ள நோட்டுகளை மாற்றும் தொழிலை மிக சாமர்த்தியமாக செய்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று, மலேசிய கும்பல் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு, கள்ள நோட்டுகளை ஒரு பெண் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கிறோம். அதை உரிய நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனே ரவிச்சந்திரன், சென்னையில் இருந்த சபீக் ரஹ்மானை தொடர்பு கொண்டு, ஒரு பெண் வந்து உன்னிடம் கள்ள நோட்டுகளை கொடுப்பார், வாங்கி கொள் என்று கூறியுள்ளார். ரவிச்சந்திரன் சொன்னது போலவே, அந்த மர்ம பெண் திருவல்லிக்கேணி லாட்ஜில் இருந்த சபீக் ரஹ்மானிடம் 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

சிபிசிஐடி விசாரணையில்...
ஆனால், இவர்களின் கெட்ட நேரம், இன்பார்மர் மூலம் போலீசுக்கு தகவல் லீக் ஆகி, மொத்த கும்பலும் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது. அந்த மர்ம பெண் யார்? மலேசியாவில் இருந்து வான்வழியாக அல்லது கடல்வழியாக இந்த நோட்டுகள் கடத்தி வரப்பட்டதா? விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, அந்த பெண் எப்படி சென்னைக்குள் கள்ள நோட்டுகளுடன் நுழைந்தார்? இதன் பின்னணியில் உள்ள சர்வதேச கள்ள நோட்டு மாஃபியாக்களின் முழு நெட்வொர்க் எது? இப்படி பலத்தரப்பட்ட கேள்விகளுக்கு விடை தேடி, சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளனர்.