Also Watch
Read this
எதை செய்தாவது தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பாஜக முட்டிமோதி வரும் நிலையில், அதற்காக பரம எதிரிக் கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகிவிட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள பாஜக, மசோதா ஆதரவின் போது மறைமுக ஆதரவளிப்பது குறித்து ஐடியா தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிரும் அரசியல் களம்
இரு தசாப்தங்களுக்கும் மேலாக எதிரெதிர் துருவங்களாக நின்று அரசியல் செய்துவரும் திமுகவும் பாஜகவும் மறைமுக ஒப்பந்தத்திற்கு தயாராகிவிட்டதாக கசிந்திருக்கும் செய்தி தமிழ்நாடு அரசியல் களத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மத்திய பாஜக அரசு, தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற துடியாய் துடித்து வருகிறது. போதிய வாக்குகள் பெறமுடியாததால் கடந்த கூட்டத்தொடரின் போது இந்த மசோதாவை பாஜகவால் நிறைவேற்ற முடியாமல் போனது. தற்போது மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் சூழலில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியே ஆக வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு அதற்கான வேலைகளை கனக்கச்சிதமாக செய்துவருகிறது பாஜக.

திமுக உடன் பேச்சு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உடைந்ததன் மூலம் பாஜகவுக்கு 20 எம்.பிக்களின் ஆதரவும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பிரிவிலிருந்து விலகிய 6 எம்பிக்களின் ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் பாஜகவின் பலம் 293ல் இருந்து 319 ஆக உயரும். ஆனால், தற்போதைய மக்களவையின் பலத்தில் 3ல் இரண்டு பங்கு ஆதரவு வேண்டுமென்றால் 360 எம்பிக்கள் மசோதாவை ஆதரிக்க வேண்டும். எனவே தான் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 8 எம்பிக்களின் ஆதரவை நாடியிருக்கிறது பாஜக. அதைப்போலவே, பரம எதிரியாக அரசியல் களத்தில் செயல்பட்டுவரும் திமுகவிடமும் தயக்கத்தை ஒதுக்கிவைத்து விட்டு பாஜக பேசத் தொடங்கியிருக்கிறது.

வெளிநடப்பே போதும்...
ஆரம்பத்தில் தொகுதி மறுவரையறை விவகாரத்தை கடுமையாக எதிர்த்து தென்மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய இயக்கத்தை முன்னெடுத்த திமுக, எப்படி திடீரென அதனை ஆதரிக்கும் என்ற கேள்வி எழலாம். அதனை சமாளிக்கவே அனைத்து மாநிலங்களுக்கு 50 சதவீத எண்ணிக்கையில் தொகுதிகளின் பலம் அதிகரிக்கப்படும் என பாஜக கூறிவருகிறது.

இதனை வைத்தே திமுகவும் ஆதரவளித்ததாக கூறி விமர்சனங்களிலிருந்து தப்பிக்க முடியும். இருப்பினும் பாஜக அரசின் மசோதாவை நேரடியாக ஆதரித்தால் அது காலத்திற்கும் அழியாத வடுவாகவே அமைந்து விடும் என திமுக எண்ணுவதால், மசோதாவை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை எதிர்க்கிறேன் என கூறிவிட்டு, வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்துவிட்டாலே போதும் என ஐடியா கொடுத்திருக்கிறது பாஜக என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை...
மசோதாவை எதிர்த்து வாக்களிப்பது காங்கிரசுக்கு ஆதரவளிப்பது போல் ஆகிவிடும் என எண்ணும் திமுக, வெளிநடப்பு செய்துவிட்டால் இரு கட்சிகளையும் தாங்கள் எதிர்ப்பதை போல் காட்டிக் கொள்ள முடியும் என கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தீவிர பாஜக எதிர்ப்பை முன்னெடுத்து வரும் திமுகவின் இந்த முடிவு அதன் எதிர்கால அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கட்சியின் சீனியர்கள் சற்று நிதானமாக யோசித்து முடிவெடுக்க கூறியிருக்கிறார்களாம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை எதிரியும் இல்லை என அவ்வப்போது காலம் உணர்த்தத்தான் செய்கிறது.