Also Watch
Read this
கன்னியாகுமரி அருகே விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில், உடலில் 19 காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் அம்பலமான நிலையில், சிறை தலைமை வார்டன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளி இளைஞரின் கையை மூன்று இடத்தில் உடைத்ததாக அவருடைய உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மாற்றுத்திறனாளி மரணம்
கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைக்குளம் அடுத்த ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய கடையில் கடந்த 9ஆம் தேதி சோதனை நடத்திய போலீசார் 200 கிராம் குட்கா வைத்திருந்ததாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த சபரிவர்மன் திடீரென மயங்கி விழுந்ததாக கூறி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சிறை துறையினர் அழைத்து சென்று பரிசோதனை செய்த போது ஏற்கெனவே உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிபதி விசாரணை
இதையடுத்து, நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றதோடு, உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நெல்லை மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நீதிபதி சத்தியமூர்த்தி சடலத்தை நேரில் பார்வையிட்டார். இதனிடையே விசாரணை கைதியாக சிறையில் இருந்த சபரிவர்மன் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் தொடர்பாக அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைதான த.வெ.க. நிர்வாகி அருணை சொந்த ஜாமினில் விடுவித்து உள்ளதாகவும், சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீதி விசாரணைக்கு...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள பதிவில், மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சபரிவர்மன் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தால் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கனிமொழி, சீமான் கண்டனம்
திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இது காவல் மரணமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளதாகவும், இம்மரணத்திற்குப் பொறுப்பேற்று இதில் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, சிறைப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கைது செய்ய வேண்டும்
இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்து அம்பலமாகி உள்ளது. அதிலும் குறிப்பாக கை, கால்கள் உடைக்கப்பட்டு உள்ளதாகவும், கையை மூன்று இடத்தில் உடைத்துள்ளதாக அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உயிரிழப்புக்கு காரணமாக அனைவரையும் கைது செய்யும் வரை, உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ள சபரிவர்மனின் குடும்பத்தினர், காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

நடந்தது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், திருவிடை நம்பி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 5 பேர் தாக்கியதாக கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே தாக்குதல் நடத்தியவர்கள் யார்? யார்? நடந்தது என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.