Also Watch
Read this
திமுக - அதிமுக கூட்டணி வைக்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்துக்கு முதல்முறையாக பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெறும் கட்டுக்கதை என கூறினார். இதோடு, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் களவாடும் முதலமைச்சர் விஜய் தான் களவாணி என்றும் இபிஎஸ் விளாசினார்.

உண்மையில் களவாணி...
சேலம் ஓமலூரில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தவெக அரசு, மேகதாது அணை கட்டுவதற்கு தனி தீர்மானம் கொண்டு வந்தது. இதில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்பது தேவையற்றது.
தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? என்பதே பெரும் சந்தேகமாக இருக்கிறது ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் இயக்கம் தான் அதிமுக.

எங்கு எப்போது பேசினாலும் முதல்வர் விஜய் வார்த்தைகளை யோசித்து பயன்படுத்த வேண்டும். கரூரில் பேசிய முதல்வர் திமுக - அதிமுகவை கூட்டு களவாணிகள் என்றார். ஆனால், எங்களின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை திருடி, தனது கட்சியில் இணைத்து கொள்ளும் முதல்வர் விஜய் தான் உண்மையில் களவாணி. நாலாந்தர பேச்சாளரின் பேச்சு போலத் தான் கரூரில் விஜய் பேசியது, இருந்தது.

இரட்டை வேடம் போடுகிறாரா?
தேர்தலுக்கு முன் இரண்டு திராவிட கட்சிகள் சரியில்லை, ஆதலால் மாற்று சக்தி நான் என்று முழங்கிய முதல்வர் விஜய் அதில் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சியையே பிடித்து உள்ளார். அப்படி என்றால் விஜய் இரட்டை வேடம் போடுகிறாரா? 60 நாட்கள் ஆட்சியில் தவெக ஒன்றுமே செய்யவில்லை, ஆக்கப்பூர்வ வேலை எதுவும் செய்யாமல், வெறும் பஞ்ச் டயலாக் தான் பேசி வருகிறார்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு...
சிங்கப்பெண் படை என்பதெல்லாம் ஒரு ஷோ தான். மக்களுக்கு அதனால் எந்த நன்மையும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கி தான் தனது ஆட்சியை விஜய் நடத்தி கொண்டிருக்கிறார்.

4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும், விஜய்யின் முதல்வர் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் காங்கிரஸ் கட்சியின் நிலைமை, நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சி பரிதாப நிலையில் தான் உள்ளது, திமுக கூட்டணியில் வெற்றி பெற்று தவெகவு-க்கு சென்று பதவி வாங்கியது தான் காங்கிரஸின் கொள்கையா?
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.