Also Watch
Read this
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் சந்திப்பு நடைபெற்றது.
நீதிமன்ற ஆணையை காரணம் காட்டி மேகமலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கக் கூடாது என நேரில் வலியுறுத்தி உள்ளார்.

மறு சீராய்வு மனு...
இதுதொடர்பாக, சண்முகம் கூறியதாவது;
மேகமலை, கரூர் இனாம் நிலத்திற்கான தடை உத்தரவு குறித்து முதல்வரிடம் வலியுறுத்தினேன். நிலப் பிரச்சினைகளை தீர்வு காண தனி ஆணையம் அமைக்க வேண்டும். மேகமலையில் கிராம மக்களை வெளியேற்றக்கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை என சொல்வதை ஏற்க முடியாது. தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். வன உரிமை, நில உரிமை வழங்கப்பட வேண்டும்.

கூட்டணி யாருடன்?
சட்டப்பேரவை இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக இன்னும் முடிவு செய்யவில்லை. இதை இடதுசாரிகள் சேர்ந்து தீர்மானிப்போம். குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டாலும் அது கடுமையான கண்டனத்துக்குரிய விஷயம். குதிரை பேரம் விவகாரத்தில் மக்களுக்கு கோபம் வரவேண்டும். பிற கட்சிகளை உடைத்து, அதன் மூலம் பாஜக தங்களது பலத்தை அதிகரிக்கின்றனர். இங்கே, அதிமுகவினர் ராஜினாமா செய்துவிட்டு கட்சி மாறுகின்றனர். அதோடு, அதிமுகவில் உட்கட்சி பிரச்சினையும் உள்ளது. அதையும் இதையும் சம்பந்தப்படுத்தக் கூடாது.

மக்கள் கேட்க வேண்டும்
தொகுதி மக்கள் குதிரை பேரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். 20 நாட்கள் அல்லது ஒரு மாதத்தில் ஏன் ராஜினாமா செய்கிறீர்கள்? என பொது மக்கள் கேள்வி எழுப்பினால் எம்எல்ஏக்கள் யோசிப்பார்கள். குதிரை பேரம் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இதை திமுக, தவெக என அனைவருக்கும் தான் சொல்கிறோம்.

சேலம் குடிநீர் விநியோகம்
சேலம் மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகிக்கும் உரிமையை சூயஸ் என்கிற பிரான்ஸ் கம்பெனிக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது, ஏற்கத்தக்கதல்ல. குடிநீர் விநியோகம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுப்பதை ஏற்கவே முடியாது. அந்த ஒப்பந்தத்தை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்; இதை அவர் பரிசீலிப்பதாக தெரிவித்து உள்ளார்.

உழைப்பு சுரண்டல்...
நாகர்கோவிலில், சிறைச்சாலையில் இளைஞர் உயிரிழந்துள்ளார். இதை தடுக்க வேண்டும் என முதல்வரிடம் கூறி உள்ளோம். தமிழகம் முழுவதும், தூய்மைப் பணி ஒப்பந்ததாரர்களிடம் விடப்பட்டுள்ளது, இதை அரசு ரத்து செய்துவிட்டு, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அந்த துறையில் உழைப்பு சுரண்டல் நடந்து வருகிறது.
இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.