Also Watch
Read this
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் மூன்றே நாட்களில் தாயகம் கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இது சாத்தியமானது எப்படி, இதன் பின்னணியில் இருக்கும் பெண் அதிகாரி யார்?

வியட்நாமில் சோகம்...
வியட்நாமில் நிகழ்ந்த படகு விபத்தில் தமிழர்கள் உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த தமிழர்களின் இதயங்களில் ஆறாத ரணத்தை ஏற்படுத்திய நிலையில், பேரிழப்புக்கு மத்தியில், சற்றேனும் ஆறுதலாக அமைந்த ஒரே விஷயம், உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனடியாக தாயகம் கொண்டு வரப்பட்டதே. ஆனால், இந்தப் பணிக்குப் பின்னால் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியின் அமைதியான, அர்ப்பணிப்பான முயற்சி இருந்தது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

மரணத்தை விட கொடிய வலி
வெளிநாட்டிற்குச் சென்ற தனது பிள்ளையோ, கணவரோ ஏதாவது வாங்கிக்கொண்டு வருவார்கள் என்ற ஆர்வத்துடனும், ஏக்கத்துடனும் காத்துக்கொண்டிருந்த குடும்பத்தினருக்கு, அவர்கள் உயிரிழந்த செய்தி மரணத்தை விட கொடிய வலியை ஏற்படுத்தியது. அவர்கள் உயிரிழந்த செய்தியை விட அவர்களை உடனடியாக பார்க்க முடியாது என்பதே மிகப்பெரிய கொடுமை.

மாதக்கணக்கில்...
வெளிநாட்டில் உயிரிழந்தால், அவர்களின் உடலை தாயகத்திற்கு கொண்டு வர ஏகப்பட்ட நடைமுறைகள் உள்ளன. இருநாட்டின் தூதரக அதிகாரிகளும் கலந்தாலோசித்து முடிவு செய்து கடிதங்களைப் பெற்று அதன் பிறகு உடல்களை அனுப்பி வைக்க பல நாட்கள் ஆகும். ஏன் மாதக்கணக்கில் ஆன வரலாறும் உண்டு. அதுவரை அவர்களது குடும்பத்தினர் சாப்பிடாமலும் தூங்காமலும் படாதபாடு படுவதோடு அங்கும் இங்கும் அலைந்து பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இதனிடையே தான் வியட்நாமில் இறந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டுவந்து அவரவரது கும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்த முதலமைச்சர் விஜய், அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த போது அவர்கள் சொன்ன பெயர்தான் தீபா கனிகர்...

இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர்
யார் இந்த தீபா கனிகர்? என்று புரட்டிப் பார்த்தால், அவரது பணி அனுபவமும் சேவை மனப்பான்மையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. வியட்நாமில் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளராக பணியாற்றி வரும் இவர்தான் வியட்நாம் படகு விபத்து குறித்து தமிழ்நாடு அரசுக்கு முதலில் தகவல் அளித்துள்ளார். 2019ல் சேலம் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த தீபா கனிகர் 2023ல் சைபர் குற்றங்கள் மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவு பயிற்சிக்காக வியட்நாம் சென்று சிறப்பாக செயலாற்றியதைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளராக பணியமர்த்தப்பட்டார்.

என்கவுன்டர் நடத்திய அதிகாரி
சேலம் சரக டிஐஜியாக பணியாற்றியபோது, பெண்களுக்கான பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தி வந்த தீபா கனிகர், கடைக்கோடி கிராமங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று அவர்களது குறைகளை கேட்டு உதவி செய்தார். சமூக சேவையிலும் சிறந்து விளங்கிய அவர், பாலமலை கிராமத்திற்கு ஆய்விற்குச் சென்றபோது முதன்முறையாக அந்த கிராமத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவியின் முழு கல்விச் செலவையும் ஏற்றுக் கொண்டார்.

இப்படியாக சமூக சேவை செய்யும் சாதுவான மனம் கொண்ட அவர், பணியில் இருந்தபோது பிரபல ரவுடியை என்கவுன்டரில் சுட்டுக் கொன்று அதிரடி காட்டிய நிகழ்வுகளும் உண்டு.

வியட்நாம் சென்ற அதிகாரி
இப்படி தீபா கனிகரை பற்றி அறிந்து கொண்ட முதல்வருக்கு, தற்போதைய சேலம் டிஐஜி ஆக பணியாற்றி வரும் சந்தோஷ் ஹதிமணி என்பவரின் மனைவிதான் என்பதும் அதிகாரிகள் வாயிலாக சொல்லப்பட்டது.

இதனால் இருவருக்கு இடையேயான புரிதல் , வியட்நாமில் தீபா கனிகருக்கு இருக்கும் அதிகாரம் அனைத்தையும் ஒருங்கிணைத்து உடல்களை கொண்டுவர சமயோஜிதமாக யோசித்த தமிழ்நாடு அரசு, சந்தோஷ் ஹதிமணியை வியட்நாமுக்கு அனுப்பி வைத்தது. அதன்பிறகு தீபா கனிகர் அந்நாட்டு நடைமுறையை உடனுக்கு உடன் செய்து முடிக்க, சந்தோஷ் ஹதிமணியும் தமிழ்நாட்டிலிருந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உடல்களை தமிழ்நாட்டிற்கு அனுப்ப முயற்சி செய்தனர்.

தீபா கனிகருக்கு சல்யூட்...
இதன் பலனாக, வியட்நாமில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரின் உடல்களும் தமிழகம் வந்தடைந்தது. அவர்களது உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி நெஞ்சை கனக்க வைத்தது.

சிறிதாக ஏதேனும் உதவி செய்துவிட்டு அதனை ரீல்ஸ் பதிவிட்டு பெருமையாக நினைத்துக் கொள்ளும் சமூகங்களுக்கு மத்தியில் சைலண்டாக சாதனை படைத்துவிட்டு அடுத்தடுத்த வேலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் தீபா கனிகரைப் போன்ற அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.