Also Watch
Read this
சேலத்தில், ஈரடுக்கு மேம்பால சுவரில் வரையப்பட்டிருந்த திருமாவளவன் படத்தின் மீது சாயத்தை தெளித்துவிட்டு மர்மநபர்கள் சிட்டாக பறந்த நிலையில், மதுரையிலும் திருமாவின் போஸ்டர் மீது சாணியை வீசி அடித்து மர்மநபர்கள் கலவரத்திற்கு வழிவகை செய்துள்ளனர். இதனால் கொந்தளித்து சாலையில் படுத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த விசிகவினர், அப்பன் திருப்பதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருமாவளவனின் விசிக மாநாடு...
ஒருபக்கம் திருமாவளவனின் படத்தின் மீது சாயம் தெளிப்பு, மறுபக்கம் சாணி வீசியடிப்பு, இப்படி போஸ்டர் யுத்தத்திற்கு வழிவகுக்கும் மர்மநபர்களுக்கு நிரந்தர கடிவாளம் போட வேண்டும் என்பதே போராட்டத்தில் குதித்த விசிகவினரின் கோரிக்கை.

வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் விசிக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்வதற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும்வகையில் சேலம் புதிய பேருந்து நிலையம் ஈரடுக்கு மேம்பால சுவரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் புகைப்படத்தை வரைந்து கொண்டிருந்தனர்.

இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை மாநிலச் செயலாளர் காஜாமைதீன் கூறியதன்பேரில் ஒரு கலைஞர் படம் வரைந்து கொண்டிருந்தபோது, மாலை 5.40 மணிக்கு ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், புகைப்படத்தின் மீது சடாரென சாயத்தை தெளித்துள்ளனர். அதனை எதிர்பார்க்காத அந்த கலைஞர், உடனே காஜா மைதீனுக்கு போன் செய்து தகவல் தெரிவிக்க, அதற்கு யாராவது தெரியாமல் செய்திருப்பார்கள், மீண்டும் படத்தை வரையுறுமாறு அவர் கூறி உள்ளார். அதனால், அந்த கலைஞரும் மீண்டும் புகப்படத்தை வரைய ஆரம்பித்துள்ளார்.

சாலை மறியல் போராட்டம்
இதனிடையே, படத்தின் தோற்றம் நினைத்ததுபோன்று வந்துள்ளதா என்பதை பார்ப்பதற்காக ஈரடுக்கு மேம்பாலம் அருகே மாலை 6.40 மணிக்கு சென்றுள்ளார் காஜா மைதீன். அப்போது, அதே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் காஜா மைதீன் முன்பே மீண்டும் புகைப்படத்தின் மீது சாயத்தை தெளித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் தனது சகாக்களுக்கு உடனே தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். தொடர்ந்து, ’எழுச்சி தமிழர் மீது சாயம் பூசிய கயவர்களை கைது செய்’ என கோஷமெழுப்பியும், நடுரோட்டில் படுத்தும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ’திருமாவளவன் படத்தின் மீது சாயம் தெளித்தவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்’ என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சாயம் தெளித்தது யார்? எதற்காக தெளித்தனர்? இதன் பின்னால் இருப்பது யார்? என்பது குறித்த விசாரணையில் இறங்கி உள்ளனர். அதேபோல், உரிய அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்தது மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விசிகவினர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளது.

காவல் நிலையம் முற்றுகை
இதுஒருபுறம் இருக்க, மதுரையிலும் திருமாவளவனின் போஸ்டரில் சாணி அடிக்கப்பட்டுள்ளது விசிகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கிழக்கு மாவட்டம் வணிகர் அணி ஒன்றிய பொறுப்பாளராக பாலாஜி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டு போஸ்டர் அடிக்கப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில், மர்மநபர்கள் சாணியை வீசியடித்து தங்கள் ஆத்திரத்தை காட்டி உள்ளனர். இதனால், ஆக்ரோஷமான விசிகவினர் தங்கள் கட்சிக் கொடிகளுடன் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

நிரந்தர முற்றுப்புள்ளி...
ஒருநாள் இல்லை, 2 நாள் இல்லை, எப்போது போஸ்டர் ஒட்டினாலும் இதே பாடுதான் என குற்றம் சாட்டிய விசிகவினர், சாணியடித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கம்பி எண்ண வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனிடையே, போஸ்டரில் சாணியை வீசியர்கள் சிறுவர்கள் என காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில், அவர்கள் தானாக செய்திருக்க வாய்ப்பில்லை, அதன் பின்னால் சாதிவெறி பிடித்த கும்பல் கட்டாயம் இருந்தே தீர வேண்டும் எனக்கூறும் விசிகவினர், இந்த போஸ்டர் யுத்தத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.