Also Watch
Read this
கடந்த 2018ல் பெரும் ஆரவாரத்தோடு தொடங்கப்பட்ட எண்ணேகொள்ளு திட்டம், இன்று அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தால், பொது மக்களின் தாகம் தீர்க்க முடியாத வெறும் காகித புலியாக சுருண்டு கிடக்கிறது.

வறட்சியின் கோர பிடியில் சிக்கி தவிக்கும் கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தீட்டப்பட்ட இந்த திட்டம், எத்தகைய அவல நிலையை சந்தித்திருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும்...
ஒரு நதிநீர் இணைப்புத் திட்டம், 7 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்ந்து, இன்று பாதியிலேயே முடங்கி கிடந்தால், அதை நிர்வாக குறைவு என்பதா அல்லது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அலட்சியம் என்பதா? என்பதே பலரின் கேள்வி.

கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்ட மக்களின் தாகம் தீர்க்க, கடந்த 2018ல் தொடங்கப்பட்ட எண்ணேகொள்ளு திட்டம் இன்றைக்கு வெறும் காகித புலியாக சுருண்டு கிடக்கிறது. 7 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையிலும், 275 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை விழுங்கி விட்டு, வெறும் 50 சதவீத பணிகளோடு அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தால் முடங்கி கிடக்கிறது இந்த நதிநீர் இணைப்பு திட்டம்.

இன்று வரை எட்டாக்கனி...
கர்நாடகாவில் இருந்து, ஆர்ப்பரித்து வரும் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீர், வீணாக கடலில் கலப்பதை தடுத்து, தங்களின் வறண்ட பூமிக்கு கொண்டு வரப் போகிறார்கள் என்ற செய்தி, விவசாயிகளின் நெஞ்சில் பாலை வார்த்தது.

250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பர்கூர், தருமபுரியின் பாலகோடு, பென்னகாரம் என 6 சட்டமன்ற தொகுதி மக்களின் தாகம் தீர்க்க போகும் மெகா திட்டம் என, பகட்டு விளம்பரம் செய்தது அதிகார வர்க்கம். ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகி 7 ஆண்டுகள் ஓடிவிட, இன்றுவரை அந்த திட்டம் சாமானியர்களின் வாழ்வில் எட்டாக்கனியாகவே நீடிக்கிறது.

இழுத்தடிப்பு நாடகம்
இந்த திட்டத்தின்படி, எண்ணேகொள் தடுப்பனையிலிருந்து இடதுபுறமாக 22 கிலோமீட்டர் தூரத்திற்கு பாயும் படேதலாவ் ஏரி கால்வாயும், வலதுபுறமாக 50 கிலோமீட்டர் தூரத்திற்கு பாயும் துல்செட்டி ஏரி கால்வாயும் அமைப்பதற்காக தங்களின் உயிரினும் மேலான விளைநிலங்களை வாரி வழங்கினார்கள் சாமானிய ஜனங்கள்.

ஆனால், அங்கேதான் விளையாடியது அதிகார வர்க்கத்தின் கரங்கள். நிலத்தை அள்ளி சென்ற நீர்வளத்துறை, அதற்குரிய இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்காமல், பல ஆண்டுகளாக இழுத்தடிப்பு நாடகம் நடத்தி உழவர்களை நடுத்தெருவில் நிறுத்திருக்கிறது.

கண் துடைப்புக்காக...
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல, இன்றளவும் 50 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், மீதி 50 சதவீதப் பணிகள், அதிகாரிகளின் ஃபைல்களுக்குள்ளும், நில கையகப்படுத்துதல் என்ற முட்டுக்கட்டையிலும் சிக்கி கிடப்பில் கிடக்கின்றன.

எங்கள் நிலத்தையும் பிடுங்கிவிட்டு, உரிய பணத்தை கூட தராமல் எங்களை நடுத்தெருவில் நிறுத்த பார்க்கிறீர்களா? என கொதித்தெழுந்த விவசாயிகள், நிலம் தர மறுத்து நீதிமன்ற படிகளையேற, ஒட்டுமொத்த திட்டமும் முடங்கிப் போனது.

பணிகள் 50 சதவீதத்தை கூட தாண்டாத நிலையில், அரசு தரப்போ கண் துடைப்புக்காக ஒருசில இடங்களில் மட்டும் பெயரளவில் வேலைகளை நடத்திக் கொண்டு, திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதாக அண்டப்புளுகு ஆகாசம் பேசி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

50 சதவீத பணிகளை...
நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டதால், விவசாயத்திற்கு மட்டுமன்றி, குடிக்க ஒரு குடம் தண்ணீருக்காகவும் பொதுமக்கள் மைல்கணக்கில் அலையும் அவலநிலை உருவாகியுள்ளது. 80க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பினால் மட்டுமே இந்த இரு மாவட்டங்களின் நிலத்தடி நீர் உயரும், நீர் ஆதாரம் மேம்படும். விளை நிலங்களை வாரி வழங்கிய விவசாயிகளுக்கு சந்தை விலைக்கு இணையான இழப்பீட்டை வழங்கி, அரைகுறையாக நிற்கும் 50 சதவீத பணிகளை அரசு உடனடியாகத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.