Also Watch
Read this
அரியானா மாநிலத்தின், ஜிந்த் - சோனிபட் இடையேயான இந்தியாவின் முதல் அதி நவீன ஹைட்ரஜன் பசுமை ரயில் சேவை தொடங்கியது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில், தயாரிக்கப்பட்ட இந்த ரயிலை, நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் பசுமை ரயிலில் பயணித்து பள்ளி மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். ரயில் நிலையத்தில் இருந்து கை அசைத்து வழியனுப்பி பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தார்.

ஹைட்ரஜன் ரயில் சேவை
இந்தியாவின், முதலாவது ஹைட்ரஜன் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி, அரியானா மாநிலம், ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அரியானா ஆளுநர் அசிம் குமார் கோஷ், முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் பயணம்
பிரதமர் மோடி, கொடி அசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து, ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து சோனிபட் ரயில் நிலையத்தை நோக்கி ஹைட்ரஜன் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் பள்ளி மாணவர்கள் பயணித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், 14,700 ரூபாய் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, அரியானாவில் 12,470 கோடி ரூபாய், சண்டிகரில் 4,700 கோடி ரூபாய், பஞ்சாபில் 5,470 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மறக்க முடியாத நிகழ்வு
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;
அரியானாவும், ஜிந்த் பகுதியும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. இங்கிருந்து முதல் ஹைட்ரஜன் ரயிலை இந்தியா பெற்று உள்ளது. நாட்டின் முதல் ரயில் மும்பை - தானேவுக்கு இடையே இயக்கப்பட்டது.

அதேபோல், வரும் காலத்தில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் குறித்த செய்தி வரும்போது அரியானா, ஜிந்த், பானிபட் ஆகிய பெயர்கள் இடம் பெறுவது, தவிர்க்க முடியாது. ஜிந்த் நகருக்கு வரும்போது எனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன.

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் அமைப்பு ரீதியிலான பணிகளுக்காக, ஜிந்த் வந்தபோது மக்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் இன்றும் மறக்க முடியாததாக உள்ளது
இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.