Also Watch
Read this
மயிலாடுதுறை அருகே அரசு டாஸ்மாக் மதுபானக்கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்ததாககூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரின் செயினை கடை ஊழியர்கள் அறுத்ததாக கூறப்படும் நிலையில் மதுபிரியர்கள் ஒன்றுகூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுஒருபுறமிருக்க, வேலூர் அருகே கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்த கும்பல் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்த பெண்ணை, வீடுபுகுந்து ஆபாசமாக பேசி அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தவெக ஆட்சி, அதிரடி மாற்றங்கள்
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைத்தபிறகு பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள 717 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டார் முதலமைச்சர் விஜய். மேலும், சட்டவிரோதமாக மதுபானக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதனை கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறையில்...
இப்படி இருந்தும், அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையைவிட பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் ஓயவில்லை என மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் உள்ள 5,772 எண் கொண்ட அரசு டாஸ்மாக் மதுபானக்கடையில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்துள்ளனர். அப்போது, பாட்டில் வாங்க வந்த ஒரு இளைஞர் கூடுதல் தொகை வசூலிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டும் வசூலித்தால் எப்படி? கூடுதல் தொகை கொடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம், செயின் அறுப்பு
இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்ற, அந்த இளைஞரின் செயினை டாஸ்மாக் ஊழியர் அறுத்ததாக கூறப்படுகிறது. துண்டு துண்டாக அறுந்த செயினை கையில் வைத்துக்கொண்டு அந்த இளைஞர் கொந்தளிக்க, மதுவாங்க வந்திருந்த மற்றவர்களும் உடன்சேர்ந்து கடையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவரிடம் மட்டுமா 10 ரூபாய் வாங்குகிறார்கள், நாள் ஒன்றுக்கு எத்தனையோபேர் மது வாங்குகிறார்கள், அத்தனைபேரிடமும் 10 ரூபாய் வசூலித்தால் அதுவே பெரிய தொகை கிடைத்துவிடுமே என வாக்குவாதம் செய்தனர்.

மதுக்கடை முன் போராட்டம்
இதனை தொடர்ந்து, வாங்காதே வாங்காதே பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்காதே என போராட்டமாக மாற டாஸ்மாக் கடையின் ஷட்டர் இழுத்து மூடப்பட்டது. இதுகுறித்துப்பேசிய சமூகஆர்வலர்கள், கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் ஆக்கூர் முக்கூட்டு டாஸ்மாக் கடையில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலிக்கும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையானது, தற்போது மூவலூரிலும் இதே சம்பவம் நடக்கிறது, இப்படியே இது தொடர்ந்தால் அரசு உத்தரவிட்டதற்கு என்ன அர்த்தம்? என கேள்வி எழுப்பினர்.

எங்கே செல்கிறது?
அரசு உத்தரவு குறித்து கேட்டால் தங்களுக்கு மேலதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் கூறுவதாகவும் அப்படியென்றால் கூடுதலாக வசூலிக்கும் தொகை எங்கே செல்கிறது? யாருக்கு செல்கிறது? மேலதிகாரிகள் ஏன் ஊழியர்களுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

வேலூர், காட்பாடி அருகே...
இதுஒருபுறமிருக்க, வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஒரு பெண்ணை ஒருவர் ஆபாசமாக பேசி அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. பொன்னை கணேஷ் நகர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இதன் அருகிலேயே அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அதுகுறித்து கூலித்தொழிலாளி ரவி என்பவரது மனைவி சின்னப்பொண்ணு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு போலீசுக்கு ரகசிய தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த தகவலையறிந்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படும் நிலையில் சின்னபொண்ணுதான் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார் என்பது கள்ளச்சந்தை மதுபான விற்பனை கும்பலுக்கு தெரியவந்துள்ளது.

வீடு புகுந்து தாக்குதல்
இதனால், ஆத்திரமடைந்த குமரேசனின் தம்பி சுதாகர் சின்னப்பொண்ணுவின் வீட்டிற்கு சென்று தங்களையே போலீசில் காட்டிக் கொடுக்கிறாயா? என காது கூசும் வார்த்தைகளால் திட்டிக்கொண்டே தாக்குதலில் ஈடுபட்டதோடு, அவரது வீட்டில் இருந்த அனைவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எப்படி தெரியவந்தது?
சட்டவிரோத மது விற்பனை கும்பல் குறித்து சின்னப்பொண்ணு தகவல் கொடுத்தபோதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் பட்டப்பகலில் வீடுபுகுந்து சுதாகர் தாக்குதல் நடத்தி இருப்பாரா? புகாரளித்த பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் இனி எப்படி மக்கள் புகார் அளிக்க முன்வருவார்கள்? என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் தனிப்பிரிவு போலீசாருக்கு சின்னப்பொண்ணு அளித்த புகார் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் கும்பலுக்கு எப்படி தெரியவந்தது? அப்படியென்றால் காவல்துறை கள்ளச்சந்தை மதுவிற்பனை கும்பலுக்கு வேலை செய்கிறதா? அல்லது மக்களுக்கு வேலை செய்கிறதா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved