Also Watch
Read this
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்ததால் தான் இரட்டை இலக்கில் பொருளாதார வளர்ச்சி பெருகியதே தவிர திமுக ஆட்சியில் இல்லையெனக் கூறிய இபிஎஸ், பொய் பிரச்சாரம் செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பக்கம் பக்கமாக விளம்பரம் வேறு செய்து கொண்டிருப்பதாகவும் விமர்சனம் செய்தார்.

திருச்சியில் இபிஎஸ்
திருச்சி பொன்மலையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட இபிஎஸ், தொழில் முதலீட்டை ஈர்க்கப்போகிறேன் எனக்கூறிவிட்டு வெளிநாட்டில்போய் சைக்கிள் ஓட்டுவதற்குதான் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனாரா? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், அவர் பேசியதாவது;

ஸ்டாலின் பேசுவது அத்தனையும் பொய். அவர்கள் செய்த தவறுகளை விமர்சிக்கிறோம். அரசியல் ரீதியாக விமர்சித்தால் பரவாயில்லை, தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் திருப்பி 10 முறை விமர்சிக்க முடியும். திமுக பல நாடகத்தை அரங்கேற்றுகிறது.

அதிமுக ஆட்சியில்...
திமுக ஆட்சியில், தொழில் வளர்ச்சி ஏற்பட்டதாகவும் வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும், இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி என்றும் பொய்யை அவிழ்த்துவிட்டார். அதிமுக ஆட்சியில் ஜெயலிலதா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது, 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 5 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும், என மொத்தம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கிவருகிறது.

வளர்ச்சிக்கு மூலகாரணம் அதிமுக
ஜெயலலிதா வழியில் வந்த அரசு, 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

அதன் மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம், அதாவது அதிமுக ஆட்சியின் ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்ததால் தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டது. இந்த பொருளாதார வளர்ச்சிக்கு மூலகாரணம் அதிமுக அரசு.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved