Also Watch
Read this
Posted on: Mar 03, 2026 01:08 PM
By: Manigandan Raja
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் மாஸ்க் அணிந்து வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், பெட்ரோல் குண்டை வீசியதோடு அவ்வழியே நடந்து சென்றவர்களை சரமாரியாக வெட்டியதில் வடமாநில தொழிலாளர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவுக்குள் புகுந்து வெறியாட்டம் ஆடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வரும் நிலையில், ஜாதிய ரீதியாக நடந்தேறிய தக்குதலா? இல்லை வேறெதும் காரணமா? என்று, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிற்காத வெறியாட்டம்
நாங்குநேரியில் பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவுக்குள் புகுந்த 9 பேர் கொண்ட கும்பல், கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிய பயங்கர சம்பவம் நடுநடுங்க வைக்கிறது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெரும்பத்து பகுதியின் பட்டியலின தெருவுக்குள், மூன்று பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், அங்குள்ள டீக்கடையின் மீது பெட்ரோல் வெடிகுண்டை வீசியது. அப்போது அக்கடையில் இருந்தவர்களும், அவ்வழியே நடந்து சென்றவர்களும் பதறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடிய போதும், விடாமல் துரத்தி துரத்தி, அரிவாளால் குரூரமாக ரத்தம் தெறிக்க தெறிக்க வெட்டிவிட்டு தப்பினர். இதில், வடமாநில செங்கல் சூளை தொழிலாளர் டிரானாத் கட்டா மற்றும் உள்ளூரைச் சேர்ந்த ஜான் ஆகிய இருவர் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, கணேசன், சசிகுமார் உள்ளிட்ட 6 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதோடு, அக்கும்பலின் வெறியாட்டம் நிற்கவில்லை.
நடு நடுங்க வைத்த வாழ்க கோஷம்
அங்கிருந்து கிளம்பிய அந்த கொடூர கும்பல், களக்காடு அருகேவுள்ள கடம்போடு வாழ்வு கிராமத்துக்குள் புகுந்து பொதுமக்களை வெட்டியதில், இருவர் காயமடைந்தனர். அந்த கும்பல் தாக்குதல் நடத்தியதும் நவீன் வாழ்க வாழ்க என முழக்கமிட்டுக்கொண்டே சென்றதாக சொல்லப்படுகிறது. நடுநடுங்க வைக்கும் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டது. மர்ம கும்பல் குறிப்பிட்டு முழக்கமிட்ட நவீன் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் நாங்குநேரியை சேர்ந்தவர் என்பதும், அவர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
மதுபான பாரால் தான் பிரச்சனையே
நிலுவையிலுள்ள வழக்குகள் காரணமாக, நாங்குநேரிக்குள் வரக்கூடாதென நவீனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் ஊரிலேயே இல்லையென சொல்லப்படுகிறது. இதனிடையே நவீன் நள்ளிரவில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென தெரிவித்துள்ளார்.
இரட்டை கொலை சம்பவத்தால் நாங்குநேரியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோன்ற சம்பவம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும் நடந்தேறியதாகவும், அத்தெருவுக்குள் அருகாமையில் உள்ள மதுபான பாரால் தான் பிரச்சனையே என்கின்றனர் நேரில் பார்த்த மக்கள்.
சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேர்
இந்த மர்ம கும்பலின் அட்டூழியத்தை கண்டித்து, பெரும்பத்து பகுதியில் இரவிலும், காலையிலும் மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மக்கள் காவல்துறையினரை வலியுறுத்தினர். நவீன் தான் இரட்டை கொலையின் பின்னணியில் இருக்கிறாரா? அல்லது போலீசாரை திசை திருப்புவதற்காக அக்கும்பல் நவீன் பெயரை பயன்படுத்தி கொண்டனரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாங்குநேரியில் ஏற்கனவே சமூகம் சார்ந்த பிரச்சனை இருந்து வரும் நிலையில், இந்த கொடூர இரட்டை கொலையின் நோக்கம் என்ன? என்பது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நாங்குநேரி - ஏர்வாடி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved