Also Watch
Read this
Posted on: Mar 03, 2026 10:59 AM
By: Manigandan Raja
நாங்குநேரி பகுதியில் நடைபெற்ற படுகொலை சம்பவம் தொடர்பாக 6 பேரை பிடித்து தனி இடத்தில் வைத்து போலீஸ் விசாரணை நடத்தினர். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தென் மண்டல ஐஜி தலைமையில் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
விவரிக்க முடியாத பயங்கரம்
திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி அருகே சாலையில் நடந்து சென்றவர்களை 9 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக வெட்டியதில் வடமாநில தொழிலாளி உள்பட இருவர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். நான்குநேரி காவல் சரகம், பெரும்பத்து கடைத்தெரு பகுதிக்கு திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் இரு சக்கர வாகனங்களில் கும்பலாக வந்த 9 பேர், அரிவாளால் அங்கு நின்ற பொது மக்களையும், தப்பி ஓட முயன்றவர்களையும் சரமாரியாக வெட்டினனர். அப்போது, 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில், பெரும்பத்து இந்திரா காலனியை சோ்ந்த 42 வயதான ஜான் என்பவரும், வடமாநில தொழிலாளி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் நெல்சன், பால்வண்ணன் மகன் பிரபாகரன், வைகுண்டம் மகன் ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
செல்லும் வழியிலும் அட்டூழியம்
அந்த கும்பல் அங்கிருந்து புளியங்குளம் கிராமத்துக்குச் சென்று, அங்கு நின்றிருந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமாா் என்பவரையும் அரிவாளால் தாக்கினர். இந்த சம்பவத்தில் நெல்சன், கணேசன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
சாலை மறியல், ஆலோசனை
அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவம் தொடர்பாக 6 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி நெல்லையில் முகாமிட்டு, டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved