Also Watch
Read this
By: Web Team

ஆளும்கட்சியினரின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் திமுக இல்லை என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு. ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, கல்லூரிகள் மற்றும் அலுவலங்களில் மொத்தம் ஏழு குழுக்களாக பிரிந்த 35 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருவதால் பதற்றமான நூழல் நிலவியது. அதாவது திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கம்பன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி, கரண் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், ஜீவா வேலு இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் என எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ரெய்டு நடது வரும் திமுகவின் முக்கிய மூத்த தலைவரான அமைச்சர் எ.வ.வேலு தண்டராம்பட்டு தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், திருவண்ணாமலை தொகுதியில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்று 7 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார், அது மட்டுமில்லாமல் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2021 ஆம் ஆண்டு முதல் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த சோதனையின் போது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் உள்ளே செல்லும் பொழுது அவர்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதித்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சத்யா நகரைச் சேர்ந்த ராஜசேகரனின் மகன் கண்ணன், மதுரை நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவரது வீட்டிலும் இன்று 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 5 மணி முதலே சோதனை நடத்தினர். இந்த சோதனை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மீது கமிஷன் மற்றும் பணி நியமன முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.