Also Watch
Read this
முதலமைச்சர் விஜயின் அரசியல் வெற்றியை பார்த்து தனது தாயாரும், தனது அரசியல் என்ட்ரிக்கு அனுமதி கொடுத்து விட்டதாக நடிகர் ராகவா லாரன்ஸ், கூறி உள்ளார். ரசிகர்களாகிய நீங்களும் சொல்லிவிட்டால், அரசியலுக்கு வரத் தயார் என்றும் அறிவித்து உள்ளார்.

அரசியலுக்கு வருகிறாரா? தொடர் பதிவு
ரஜினியின் தீவிர ரசிகர், நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என்று, பன்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். ரஜினியின் ஆன்மீக அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ரஜினி அரசியல் கட்சி தொடங்கி இருந்தால், அதில் முக்கிய பொறுப்பை வகித்திருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், ரஜினியும் கட்சி தொடங்கவில்லை, ராகவாவும் அரசியலுக்கு வரவில்லை.

திருச்சி கிழக்கில் போட்டியா?
இந்நிலையில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என்று தகவல் பரவியது. இதுகுறித்து, ராகவா லாரன்ஸ் கடந்த 7ஆம் தேதி விளக்கம் ஒன்றை கொடுத்தார்.
"திருச்சி கிழக்கு தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பல ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு ஊடக நண்பர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டதோடு நேரில் சந்திக்கவும் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல் அதிகமாக பேசப்படும் நிலையில், இதுதொடர்பாக நான் ஒரு விஷயம் நேரடியாக சொல்லவேண்டும். பென்ஸ் படப்பிடிப்பு ஜூன் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனால் ஜூன் 11ஆம் தேதி என் தாயாரின் ஆசிர்வாதத்துடன் என் முடிவை அறிவிக்க உள்ளேன்” என்று ராகவா லாரன்ஸ் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவையொட்டி தனது முடிவை ஜூன் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு அறிவிக்க உள்ளதாக பதிவிட்டிருந்தார்.

வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ்
இந்த நிலையில், இன்று ஜூன் 12ஆம் தேதி வெளியிட்ட வீடியோவில், ராகவா லாரன்ஸ் பேசி இருப்பதாவது;
தெய்வம் போன்று, நான் மதிக்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறியதும் மகிழ்ச்சியில் திளைத்தேன். ஆனால், அரசியலில் இருந்து பின் வாங்குவதாக ரஜினி அறிவித்ததும் மிகவும் கவலை, வேதனை அடைந்தேன்.
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு நான் சாப்பாடு கொடுத்ததை சீமான் விமர்சித்த போது தான், வாழ்வில் அரசியல் நுழைந்தது. அரசியலில் சீமானை எதிர்த்து அழிக்க வேண்டும் என ரசிகர்கள் சொன்னபோதும், வெறுப்பு அரசியல் கூடாது என அறிவுறுத்தினேன்.

ரஜினியும் விஜய்யும்...
ரஜினிகாந்த் எவ்வளவு நெருக்கமோ, அதேபோல் நண்பர் விஜய்யும் அதே அளவிற்கு நெருக்கம் தான். மேகமாய் வந்து போகிறேன்... பாடலில் தொடங்கி விஜய்க்காக நான் நடனம் அமைத்திருக்கிறேன். சரக்கு வச்சுருக்கேன், தாம் தக்க தீம் தக்க உள்ளிட்ட பாடல்கள் உங்களுக்கே தெரியும். அவருக்காக மட்டுமே தமிழில் பணியாற்றினேன். வேறு யார் அழைத்தாலும் வர மாட்டேன். விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த போது, எனக்குள் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனென்றால் விஜய் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதில் பின்வாங்க மாட்டார்.

அம்மா உடன் ஆலோசனை
அப்போது, என்னுடைய அம்மாவை சந்தித்தேன். விஜய் உடன் அரசியலில் இணையலாமா? என்று அம்மாவிடம் கேட்டேன். உடனே, என் அம்மா விஜய்யை சந்திக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அங்கு அழைத்து சென்றால், விஜய்யிடம் நீ அரசியலுக்கு வராதே, என்று அட்வைஸ் கொடுக்க தொடங்குவேன் என்றார். அதனால் அரசியலுக்கு செல்லும் முடிவை எடுக்க தாமதமானது. இருந்தாலும் விஜய்யிடம் அரசியல் தொடர்பாக பேசிக் கொண்டே இருந்தேன். கூட்டணிக்கு யாரும் வராதது குறித்தும் புலம்பினேன்.

ரசிகர்களிடம்...
ஆனால், தேர்தல் முடிவுகள் வரலாற்றை புரட்டி போட்டது. அதனை அம்மாவிடம் காட்டிய போது, நான் அரசியலுக்கு செல்ல நம்பிக்கையுடன் அனுமதி அளித்தார். இருந்தாலும் தாய்க்கு நிகராக இருக்கும் ரசிகர்களிடம் கேட்கிறேன். நான் அரசியலுக்கு வரலாமா? நீங்களே சொல்லுங்கள். கமெண்ட் செய்யுங்கள்.
இவ்வாறு தான் வெளியிட்ட வீடியோவில் ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved