Also Watch
Read this
Posted on: Jan 31, 2026 06:49 AM
By: Manigandan Raja
வரும் சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடனே ஆட்சியமைக்கும் என்று, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய் சிறந்த நடிகர் என்ற இபிஎஸ், தாங்கள் மக்களை நம்பியுள்ளதாகவும் விஜய் தனது ரசிகர்களை நம்பியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் தேர்தல்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களின் கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்தார். வரும் தேர்தல் இபிஎஸ்சை முதல்வராக்குவதற்கான தேர்தலா அல்லது திமுக ஆட்சியை அகற்றுவதற்கான தேர்தலா என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இபிஎஸ், இந்த தேர்தல் வாரிசு அரசியலுக்கும் குடும்ப ஆட்சிக்கும் முடிவு கட்டும் தேர்தல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் தேர்தல் என்றார்.
திமுக தான் காங்கிரசின் பி டீமா?
வரும் தேர்தல் திமுகவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையிலான போர் என்ற முதல்வர் ஸ்டாலின், பாஜகவின் பி டீமாக அதிமுக மாறிவிட்டதாக விமர்சித்தும் பேசியது பற்றி வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தேசிய அளவில் என்.டி.ஏவுக்கு பாஜக தலைமை தாங்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் அதிமுகதான் அந்த கூட்டணிக்கு தலைமை என்றார். மேலும் காங்கிரசுடன், திமுக கூட்டணி வைத்துள்ளதால் திமுகதான் காங்கிரசின் பி டீமா என்றும் அவர் சீறினார்.
மேலும் சில கட்சிகள், சஸ்பென்ஸ்
பாஜக அழுத்தத்தால் டிடிவி தினகரனுடன் கூட்டணி ஏற்பட்டதா? என்ற நெறியாளரின் கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்தவர் என்றார். தாங்கள் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகவில்லை என்றும் கூறினார். கூட்டணி அமையாது என்றவர்கள் தற்போது மிகப்பெரிய கூட்டணி உண்டாகி விட்டதால் திமுக தரப்பு விமர்சித்துக் கொண்டிருப்பதாகவும் தங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளதாக சஸ்பென்ஸ் வைத்து பேசினார்.
விஜய் ஒரு சிறந்த நடிகர்
பல நாட்களாக யூகங்களாக இருந்த அதிமுக - தவெக கூட்டணி அமையவிருப்பதாக பரவிய தகவலை பற்றி, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சூழ்நிலைக்குத் தக்கவாறு தான் எந்தக் கட்சியும் முடிவெடுக்கும் என ஒற்றைவரியில் இபிஎஸ் பதிலளித்தார். விஜய் ஒரு சிறந்த நடிகர் என்ற இபிஎஸ், அவரது அரசியல் செயல்பாடு குறித்தும் தனது பார்வையை விவரித்தார்.
தேர்தலுக்கு பின்னர் வாக்கு சதவீதம் தெரியவரும்
விஜய் ரசிகர்களை நம்பி, அரசியலுக்கு வந்திருப்பதாகவும் தாங்கள் மக்களை மட்டுமே நம்புவதாகவும் கூறிய இபிஎஸ், 10 தேர்தல்களை சந்தித்துள்ள தான், அடிமட்டத்தில் இருந்து உயர்ந்தவன் என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன நடக்கிறது என்பது முழுமையாக தமக்கு தெரியும் என்றார். ஆனால், விஜய் அப்படி இல்லை, அவர் புதிதாக வந்திருக்கிறார் என்றார். விஜய், தவெக பற்றிய கணிப்பு என்ன? என்ற கேள்விக்கு நேரடியாக விளக்கமளிக்காத இபிஎஸ், விஜய் புதிய கட்சியை தொடங்கி உள்ளார், எனவே தேர்தலுக்கு பின்னர் தான் அவரது வாக்கு சதவீதம் தெரியவரும் என்றார்.
கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதே இலக்கு
ஓபிஎஸ்சிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? என்ற கேள்விக்கு, அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க வழியில்லை என திட்டவட்டமாக கூறினார். மேலும், தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் இபிஎஸ்சுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா? என்றதற்கு, என்னதான் மனமாச்சரியம் இருந்தாலும் கூட்டணி தர்மம் என வந்துவிட்டால் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதே இலக்காகும் என்றார்.
காங்கிரஸ் கை நழுவிச் சென்றுவிடுமோ?
ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், அதிமுக ஆட்சி அமைக்கப்படுமா? அல்லது என்.டி.ஏ. ஆட்சி அமைக்கப்படுமா? என தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி அறிவிக்கப்படும் போதே தெளிவாக அதிமுக தலைமையிலான அரசு அமையும் என்று குறிப்பிட்டதாகவும், நிச்சயம் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும் இபிஎஸ் பதிலளித்தார். திமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற உள்ளதாகவும், ஸ்டாலினும் உதயநிதியும் காங்கிரஸ் கை நழுவிச் சென்றுவிடுமோ? என்ற அச்சத்தில் இருப்பதாகவும் விமர்சித்தார்.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்
தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு, வெளிப்படையாக எதையும் சொல்ல முடியாது என்ற இபிஎஸ், விரைவில் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றார். மேலும் பாஜக 40 தொகுதிகள் கேட்டதாக பரவிய தகவலுக்கு, சிலவற்றைச் சொல்ல முடியும் சிலவற்றைச் சொல்ல முடியாது என்ற இபிஎஸ், இறுதியாக எம்.ஜி.ஆர் பாடலை பாடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved