Also Watch
Read this
700 விவசாயிகளின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்து விட்டு, விவசாயம் பற்றி எல்லாம் பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா? என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

தேர்தல் வந்து விட்டால்...
இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
தேர்தல் வந்துவிட்டால், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு மீது பாசம், டன் கணக்கில் வருகிறது. விவசாயம், விவசாயிகளின் வருமானம், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து, திருச்சியில் பிரதமர் மோடி பேசி உள்ளார். அதிமுக ஆட்சியில் நசிந்து கிடந்த விவசாயத்தை மீட்டெடுக்க வேளாண்மைக்கு என்று, தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த ஐந்தாண்டுகளாக வேளாண் துறைக்கென ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 76 கோடி ரூபாய் நிதி, உழவர்களின் நலனுக்காகவும், உழவுத் தொழிலை மேம்படுத்தவும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகளை ஒடுக்கினார்
பிரதமர் மோடி என்ன செய்தார்? விவசாயத்தையே அழிக்கும் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் பார்த்தார். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் போராடிய விவசாயிகள் மீது கண்மூடித்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார். மோசமான 3 விவசாய சட்டங்களைக் கொண்டு வந்து, தனக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்பட்டார். சந்தைகளை நீக்கிவிட்டு, விவசாய வணிகத்தை, கார்ப்பரேட் மூலம் செய்ய விவசாயச் சட்டங்கள் வழி வகுத்தன.

பாடம் எடுக்க வெட்கமாக இல்லை?
அந்த சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார். இந்திய வரலாற்றிலேயே நடந்த மிக நீண்ட மக்கள் போராட்டம் என்று கூறப்படும் போராட்டத்தை தலைநகர் டெல்லியின் எல்லைகளில் ஓராண்டுக்கும் மேலாக முகாமிட்டு விவசாயிகள் நடத்தினர். மழை, வெயில், கடும் பனி, போலீஸ் கட்டுப்பாடு, தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என அக்கிரமங்களைச் செய்ய முடியுமோ? அத்தனையும் செய்த பிரதமர் மோடி தான் திருச்சியில் கபட வேடம் போடுகிறார். 700 விவசாயிகளை கொன்றுவிட்டு, விவசாயம் பற்றி எல்லாம் பாடம் எடுக்க வெட்கமாக இல்லை? உத்தரபிரதேசம் லக்கிம்பூரில் ஊர்வலம் சென்ற விவசாயிகள் மீது, பா.ஜ.க.வின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் காரை ஏற்றி 4 அப்பாவிகளைப் படுகொலை செய்தவர்கள், காருண்ணியம் பேசுகின்றனர்.

பொய்க் கணக்கு கூறிய இபிஎஸ்
பிரதமர் மோடி இப்படி என்றால் அவரது பரம அடிமையான பழனிசாமியும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததோடு சேலம் - சென்னை பசுமை வழிச் சாலையை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவி விட்டார். பிரதமர் மோடியின் 11 ஆண்டு காலத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். அந்த தரவுகளை மறைத்து மோசடி ஆட்சியை நடத்தி வருகின்றனர். அதே பாணியைத் தான் எடப்பாடி பழனிசாமியும் தன்னுடைய ஆட்சியில் செய்தார். சொந்த காரணங்களுக்காக தான் விவசாயிகள் இறந்தனர் என்று, அன்றைக்கு பொய்க் கணக்கு சொன்னார். மதுரையில் விவசாயத்தை அழிக்கும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்கு காரணமான, கனிம வள சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு மாநிலங்களவையில் கொண்டு வந்த போது, ஆதரவு கொடுத்து, மதுரை விவசாயிகளுக்குத் துரோகம் செய்தவர் இபிஎஸ். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி விவசாயத்தைக் காப்பாற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

45.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க யானை
திருச்சியில், விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடிதான், சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க விவசாயப் பொருட்களை இந்திய சந்தைகளில் விற்க ஒப்புதல் அளித்து, இந்திய விவசாயத்தையே சவக்குழியில் தள்ளி உள்ளார். அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான வரியை 18 சதவீதமாகக் குறைத்து, இந்திய விவசாயத்தைச் சவக்குழியில் தள்ளி உள்ளார். 45.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க யானையை, உள்ளூர் கரும்புத் தோட்டத்திற்குள் நுழைய விட்டு, பொருளாதாரத்தை சிதைக்க பார்க்கிறார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று 2014ல் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றி விட்டாரா?
இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved