Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்கா - இஸ்ரேலை கண்டித்து ஈராக் மக்கள் போராட்டம் :
ஈரான் மீது 5 வார காலமாக தொடர் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்து, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விடுதலை சதுக்கத்தில் பொதுமக்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும், ஈராக் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நீண்டகால ராணுவ தளங்களை அகற்ற வேண்டும் எனக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
மஹ்ஷாஹர் பெட்ரோகெமிக்கல் மண்டலத்தில் இஸ்ரேல் தாக்குதல் :
ஈரானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மஹ்ஷாஹர் ((Mahshahr)) பெட்ரோகெமிக்கல் மண்டலத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அந்த ஆலையில் வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளுக்கான மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது தெரிய வந்ததால் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார்.
ஈரானின் ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு தரைமட்டம் :
ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில், வடக்கு இஸ்ரேலின் ஹைஃபா நகரத்தில் உள்ள குடியிருப்பு இடிந்து தரைமட்டமாகக் கிடக்கும் கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது. காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோரை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உள்ளார்களா என இரவு நேரத்திலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் C-130 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் :
விமானியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் C-130 விமானத்தையும் ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியானது. ஈரான் வான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட எப்-15 மற்றும் ஏ-10 ரக போர் விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் குதித்த 2 விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவர் மாயமானார்.

அவரை பிடித்து தரும் நபர்களுக்கு ஈரான் சன்மானம் அறிவித்திருந்தது.
ட்ரம்ப் விதித்த கெடுவை நிராகரித்த ஈரான், பதிலடி பதிவு :
ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருந்த 48 மணி நேர கெடுவை நிராகரித்துள்ள ஈரான், 1980-ல் நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளது. ஈரானில் அமெரிக்க ராணுவ வீரர்களை மீட்க அந்நாட்டின் சிறப்பு படைகளால் நடத்தப்பட்டு, தோல்வியில் முடிந்த "ஆபரேஷன் ஈகிள் கிளா" என்கிற நடவடிக்கையை நினைவூட்டி உள்ளது.
ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதிக்கட்ட எச்சரிக்கை :
நாளைக்குள் ஹோர்முஸ் ஜலசந்தியை திறந்து மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லாவிட்டால், ஈரானின் மின் நிலையங்கள் உட்பட அனைத்து கட்டமைப்புகளும் தகர்க்கப்படும் எனவும் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்.

அதோடு, நரகத்தை காட்ட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved