Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரானை விட்டு வெளியேறி விட்டதாக சவுதி ஊடகம் செய்தி
ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவின் அல் ஹதாத் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் தகவல்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மொஜ்தபா பெயரில் வெளியாகும் எந்த அறிக்கையும், அறிவிப்பும் அவர் எழுதியது கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல, அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வரும்வரை எக்காரணம் கொண்டும் மொஜ்தபா பொதுவெளியில் தோன்றமாட்டார் என டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 5 பேர் மீட்பு

கிழக்கு இந்தோனேசியாவில் படகு மூழ்கிய விபத்தில் 7வயது சிறுமி உட்பட ஐந்து பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், 20பேர் மாயமாகினர். 78 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற படகு, இயந்திரக் கோளாறு காரணமாக செலாயார் தீவுக்கு அருகே சென்றபோது கடலில் மூழ்கியது.
இதில், மீன் பிடிக்கும் கூண்டைப் பற்றிக் கொண்டு நீரில் மிதந்த ஐந்து பேரும் மீட்கப்பட்டனர். மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காட்டுத்தீயில் 16,000 ஹெக்டேர் வனப்பகுதி முற்றிலும் தீக்கிரை

ஸ்பெயின் நாட்டில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயில் 16 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி முற்றிலும் தீக்கிரையான நிலையில், ஆயிரத்து 100-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
அல்மேரியாவில் உள்ள லாஸ் கல்லார்டோஸ் பகுதியில் அண்மையில் பற்றிய தீ வனப்பகுதியில் வேகமாக பரவியது. தீ விபத்தால் சரகோசா உள்ளிட்ட 5 நகராட்சிகளில் வசிக்கும் மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர். காற்றின் திசையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அதிக வெப்பம் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.