Also Watch
Read this
By: Manigandan Raja

அதிபர் டிரம்ப் குடும்பத்தினரை சவப்பெட்டிக்குள் வைத்து பேனர்
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை சவப்பெட்டிகளுக்குள் அடக்கம் செய்ததுபோல ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாரசீக மொழியில் ரத்தத்திற்கு ரத்தம் என்கிற வாசகம் எழுதப்பட்டுள்ள அந்த பேனரில், அமெரிக்க கொடியால் போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளுக்குள் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பின்னணியில் வெள்ளை மாளிகை எரிவது போன்று உள்ளது. ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனி கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவோம் என புதிய தலைவர் மொஜ்தபா கூறியிருந்த நிலையில், இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு வீரர் மாயமாகி உள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதல்களை தற்காக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஈரான், அமெரிக்கா தாக்குதல்களை தொடர்ந்தால் மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபு லீக், வளைகுடா நாடுகள் ஒருங்கிணைப்பு குழு கண்டனம்

குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் நாடுகளின் மீதான ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு அரபு லீக் மற்றும் வளைகுடா நாடுகள் ஒருங்கிணைப்பு குழு ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இறையாண்மையை மீறும் வகையிலும், குடிமக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் சர்வதேச சட்ட மீறல் எனவும், போர் குற்றம் எனவும் கண்டித்துள்ளன.
மேலும், குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் நாடுகள் தங்களது நாடுகளின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.