Also Watch
Read this
By: Manigandan Raja

பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு:
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் ஒரு லிட்டருக்கு 520 புள்ளி 35 பாகிஸ்தானி ரூபாயாகவும், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 458 புள்ளி 40 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த பாதிப்பை குறைக்க இருசக்கர வாகனங்களுக்கு மாதம் 20 லிட்டர் வரை லிட்டருக்கு 100 ரூபாய் மானியமும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1,500 ரூபாய் மானியமும் வழங்கப்படும் என பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் அறிவித்துள்ளார்.
ஈரானில் இதுவரை 30 பல்கலைக்கழகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின :
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டு வரும் போரில், இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஈரானியப் பல்கலைக்கழகங்கள் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக ஈரானின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹொசைன் சிமாய் சரஃப் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் உள்ள புகழ்பெற்ற ஷாஹித் பெஹேஷ்டி பல்கலைக்கழகம் மற்றும் ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளிட்டவை அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும், தங்கள் பல்கலைக்கழகங்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்கள், நாட்டின் அறிவியல் மற்றும் கலாச்சார அடித்தளங்களை பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியே என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் 70% ஸ்டீல் உற்பத்தி ஆலை அழிப்பு :
ஈரானின் எஃகு உற்பத்தித் திறனில் 70 விழுக்காடு பகுதியை தாங்கள் அழித்து விட்டதாகவும், தற்போது ஈரானின் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

டெலிகிராம் வலைதளத்தில் அவரது வீடியோ வெளியான நிலையில், அதில் பேசிய அவர், தாம் உறுதி அளித்தபடியே, ஈரானை தொடர்ந்து நசுக்குவோம் என்றும், இனிவரும் நாட்கள் மகிழ்ச்சியானவையாக அமையட்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை :
ஈரானின் ஒரே அணுமின் நிலையத்தை குறிவைத்து நடத்தப்படும் அமெரிக்க- இஸ்ரேலிய படையின் தொடர்ச்சியான தாக்குதல்கள், புஷேர் பகுதியில் ஒரு மாபெரும் கதிரியக்க பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.
தென்மேற்கு ஈரானில், பாரசீக வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ள புஷேர் அணுமின் நிலையத்தின் மீது, எதிரிநாட்டு படைகள் சனிக்கிழமை காலை மீண்டும் தாக்குதல் நடத்தியதாக அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான மிகவும் அபாயகரமான தாக்குதல்களை மேற்கத்திய நாடுகள் கண்டிக்காதது, அவர்களின் செயலற்ற தன்மையை காட்டுகிறது என அப்பாஸ் அராக்சி விமர்சித்துள்ளார்.
ஈரான் மீது நரகம் மழைபோல பொழியும் என டிரம்ப் மிரட்டல் :
காலம் கடந்து கொண்டிருக்கிறது என ஈரானை எச்சரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான தமது காலக்கெடுவை ஈரான் கடைபிடிக்கா விட்டால், அவர்கள் மீது நரகம் மழைபோல பொழியும்" என்று கூறியுள்ளார்.

ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவோ அல்லது ஹோர்முஸ் நீரிணையை திறந்து விடவோ தாம் அவர்களுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்ததை நினைவூட்டுவதாகவும், நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது; இன்னும் 48 மணி நேரத்திற்குள் காலக்கெடுவை கடைபிடிக்காவிட்டால், ஈரான் மீது கடும் அழிவு பொழியும் என்றும், கடவுளுக்கே மகிமை! எனவும் தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved