Also Watch
Read this
யாரும் பேசாக கதைகளுடன் களமிறங்கி சாதனை புரிந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

தேனி அல்லி நகரத்தில் இருந்து...
இயக்குநர் இமயம் என்று, தமிழ் சினிமாவே கொண்டாடும் பாரதிராஜா உடல்நல குறைவால் தனது 84ஆவது வயதில் மறைந்தார். அவரது இழப்பு தமிழ் சினிமாவில் ஈடு செய்ய முடியாதது என்று, திரை பிரபலங்கள் கண்ணீர் விட்டு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்த் திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தி சென்ற பாரதிராஜா, தேனி மாவட்டம் அல்லிநகரை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே சினிமா மீது அதீத காதல் கொண்ட பாரதிராஜா, திரைத்துறை வாய்ப்பு தேடி சென்னை வந்தார். பல கட்ட தீவிர முயற்சிக்கு பிறகு, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல், கிருஷ்ணன் நாயர், ஜெயகாந்தன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாரதிராஜா, சினிமாவின் நுணுக்கங்களை கற்று தேர்ந்தார்.

16 வயதினிலே தொடங்கி...
தன்னை சினிமா பட்டறையில் பட்டை தீட்டிக் கொண்ட பாரதிராஜா, 1977ஆம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதுவரை இருந்த சினிமா பார்வையை மாற்றி, கிராமத்து மண் வாசனையில் இருந்த 16 வயதினிலே படம் ரசிகர்களை கொண்டாட வைத்தது.

70களிலும், அதற்கு முன்பும் தமிழ் சினிமா என்றால் ஸ்டூடியோக்களிலும், செட் போட்டு படப்பிடிப்பு நடத்துவது வழக்கமாக இருந்தது. ஆனால், 77ல் திரைத் துறைக்கு வந்த பாரதிராஜா, முதல் படத்திலேயே கிராமத்து மண் வாசனையை திரையில் காட்டினார். கேமராக்களை மரத்தடியிலும், புழுதி பறக்கும் பொட்டல் காடுகளிலும் எடுத்து சென்று பாமர மக்களின் வாழ்க்கையை அப்படியே திரையில் காட்டினார்.

இவர் இயக்கிய 16 வயதினிலே படத்தில் அதுவரை ஸ்டைலிஷ் ஹீரோவாக இருந்த கமல்ஹாசனை வெற்றிலை வாயுடன், அழுக்கு ஆடையுடன் இருக்கும் சப்பாணியாக நடிக்க வைத்தார். ரஜினியை, மிரட்டலான வில்லனாக பரட்டை கேரக்டரில் காட்டி அவர்களுக்கான புது ரூட்டை போட்டு கொடுத்தவர் பாரதிராஜா தான். ஸ்ரீதேவியை இளமை கொஞ்சும் பெண்ணாகவும், இன்றுவரை காமெடியில் தமிழ் சினிமா கொண்டாடும் கவுண்டமணியை, சகுனி வேலை பார்க்கும் வில்லனாக சித்தரித்து காட்டியதும் பாரதிராஜாவின் அந்த கலை படைப்பு தான்.

முதல் படத்தில் பிரபலங்கள்
16 வயதினிலே படம் பாரதிராஜாவுக்கு மட்டுமில்லாமல், கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி, கவுண்டமணி என எல்லாருக்கும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான ஒரு ஸ்பெஷல் பொக்கிஷமாகவே இதுவரை இருந்து வருகிறது. பாரதிராஜா என்றாலே கிராமத்து கதையும், உயிரோட்டமுள்ள கதைக்களமும் இருக்கும். அப்படிப்பட்ட பாரதிராஜாவின் படைப்புகள் காதலை மட்டும் சொல்லவில்லை. காதலுடன் சேர்ந்து புரட்சியையும் திரையில் காட்டிய மாய வித்தகர் தான் பாரதிராஜா. கிழக்கே போகும் ரயில் படம், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்தை கூறும். அலைகள் ஓய்வதில்லை படத்தில் சாதியை மட்டுமில்லை, மதத்துக்கும் அப்பாற்பட்டது தான் காதல் என்பதை அவ்வளவு எதார்த்தமாக காட்டி இருப்பார்.

முதல் மரியாதை...
முதல் மரியாதை படத்திலும், காதலுக்கு வயது முக்கியமில்லை, அது உணர்வுப்பூர்வமானது என்பதை எந்த நெறியும் மாறாமல் சொல்லி இருப்பார் பாரதிராஜா. கருத்தம்மா படத்திலோ, பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொல்வதற்கு எதிராகவும், பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக பேசி இருப்பார் பாரதிராஜா. வேதம் புதிது படத்தில் சாதிக்கும், வர்ணாசிரமத்தை ஆதரித்தவர்களுக்கும் சாட்டையடி கொடுத்திருப்பார் பாரதிராஜா.

இவர் தான் இயக்குனர் இமயம்
இதையும் தாண்டி குடும்பத்தாலும், சமூகத்தாலும் ஒதுக்கப்பட்ட ஒருவன் சைக்கோ கொலையாளியாகி பெண்களை பழிவாங்கும் சிகப்பு ரோஜாக்கள் படத்தை த்ரில்லர் கொஞ்சமும் குறையாமல் கொடுத்து, தான் கிராமத்து கதையை மட்டும் கூறும் கலைஞன் இல்லை என்பதை நிரூபித்து இருப்பார் பாரதிராஜா.

இப்படி சினிமா வெறும் பொழுதுபோக்கு என்று மட்டுமில்லாமல், அதில் சமூகத்துக்கும், மக்களுக்குமான கருத்தை ஆழ பதிய வைத்த பாரதிராஜா, தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என்ற புகழையும் பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved