Also Watch
Read this
தமிழ் மண்ணின் கதைகளை உலகப் புகழ்பெற செய்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் விட்டுச் சென்ற ஈடு இணையற்ற கலைப்பயணத்தையும், தமிழ் சினிமாவுக்கு அவர் வழங்கிய பங்களிப்பையும் போற்றும் வகையில், திரைப்பிரபலங்கள் தங்களது உருக்கமான இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கண்ணீர் காணொலி வெளியிட்ட வைரமுத்து
பாரதிராஜாவின் மறைவையொட்டி, அவரது நெருங்கிய நண்பரும் கவிஞருமான வைரமுத்து, கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவை தனது உடன்பிறப்பாக குறிப்பிட்டு, பிதாமகனே, கிராமத்து ராஜாவே போய்விட்டாயா? என்று வைரமுத்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர் என்றும், திரையுலகக் கதவுகளைத் திறந்து புதிய உச்சங்களை தொட்டவர் எனவும் பாரதிராஜாவின் கலைப் பங்களிப்பை பாராட்டியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இரங்கல்
திரையுலகின் போக்கை மாற்றி அமைத்த பெரும் ஆளுமை கொண்ட பாரதிராஜா, பல இளம் இயக்குநர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தமாக விளங்கிய கலைஞரை இழந்து விட்டதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி இரங்கல்
பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு வழங்கிய பங்களிப்பும், அவர் விட்டுச்சென்ற கலைப்பயணமும் என்றும் அழியாதவை என குறிப்பிட்டு நடிகர் விஜய் சேதுபதி இரங்கல் தெரிவித்தார்.

இயக்குநர் சேரன் வேதனை
கிராமத்து மனிதர்களின் உணர்வுகளை திரையில் மிக அழகாகப் பதிவு செய்த பாரதிராஜாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என இயக்குநர் சேரன் தனது வேதனையை பகிர்ந்துள்ளார். எண்ணற்ற இயக்குநர்கள் உருவாக பாதை அமைத்து கொடுத்த பாரதிராஜா, ஒரு காலத்தில் அலங்காரமான வாழ்க்கையை மட்டுமே மையமாக வைத்திருந்த தமிழ் சினிமாவிற்குள், எதார்த்தமான முகங்களையும், இயல்பான மக்களின் வாழ்க்கையையும் கொண்டு வந்து, அந்த அடையாளத்தையே மாற்றி காட்டியவர் எனவும் புகழாரம் சூட்டினார்.
நடிகர் விஷால் உருக்கம்
தமிழ் சினிமாவிற்கு பல புதிய பரிமாணங்களை கற்றுக்கொடுத்தவர் பாரதிராஜா என குறிப்பிட்ட நடிகர் விஷால், தமிழ் திரையுலகின் ஒரு பெரும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நடிகை சிம்ரன் வருத்தம்
பாரதிராஜாவின் படைப்புகள் என்றும் காலத்தால் அழியாதவை என்றும், அவர் திரையுலகிற்கு அளித்த பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும் எனவும் நடிகை சிம்ரன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி புகழாரம்
மண்ணின் வாசனையையும், மனித உறவுகளின் அழகையும், எதார்த்தமான உணர்வுகளையும் காலத்தால் அழியாத காவியங்களாக மாற்றிய பாரதிராஜாவின் படைப்புகள் பல கோடி இதயங்களை தொட்டவை என தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி புகழராம் சூட்டியுள்ளார். மேலும் அவருடன் ஆராதனை படத்தில் பணியாற்றியது தனது அதிர்ஷ்டம் எனவும் குறிப்பிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகர் கவுண்டமணி இரங்கல்
தனது திரையுலகப் பயணத்தில் பதினாறு வயதினிலே திரைப்படம் தொடங்கி, பாரதிராஜா இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளேன் என்றும், குறிப்பாக, அந்தப் படத்தின் மூலம் தனக்கு ஒரு நிலையான முகவரியைப் பெற்றுத் தந்தவர் பாரதிராஜா என்று நடிகர் கவுண்டமணி தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.
துணைமுதல்வர் பவன்கல்யாண் புகழாரம்
தமிழ் சினிமாவை கிராமத்து மண்வாசனை மாறாமல், எதார்த்தமான கதைகளுடன் உலகிற்கு எடுத்து சென்றவர் பாரதிராஜா என்று குறிப்பிட்டு ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மோகன்லால், அல்லு அர்ஜூன் இரங்கல்
மண்ணின் வாசனையையும், மௌனத்தின் உண்மைகளையும், ஒவ்வொரு காட்சியிலும் ஆன்மாவையும் கண்டறிந்த ஒரு மாபெரும் கலைஞனை இழந்து விட்டதாக தெரிவித்த மலையாள நடிகர் மோகன்லால், தொடரும் திரைப்படத்தில் அவருடன் பணியாற்றியது, என் திரையுலக பயணத்தில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என தனது புகழஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார்.
எதார்த்தமான கதைகளை திரையில் கொண்டு வருவதில் பாரதிராஜவுக்கு நிகர் யாருமில்லை என்றும், அவர் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பும், அவரது தொலைநோக்குப் பார்வையும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved