Also Watch
Read this

தமிழ்த் திரையுலகில் இயக்குநர் இமயம் என புகழப்பட்ட பாரதிராஜா, ஆகச் சிறந்த கலை நயம் மிக்க இயக்குநர் என்பது உலகம் அறிந்த ஒன்று. தமிழ் சினிமாவில் அதுகாறும் வரை இருந்த திரைப்பட இலக்கண விதிகளை தகர்த்தெறிந்த புதுமைப்பித்தன் பாரதிராஜா. கதாபாத்திரங்களின் பெயர்களை முணுமுணுக்க வைத்த செப்படி வித்தைக்காரன். இப்படி எண்ணற்ற சிறப்புக்கு சொந்தகாரரான பாரதிராஜா, திரையுலகில் பதித்த முத்திரைகள் சிலவற்றை தற்போது பார்க்கலாம்.
* கரிசல்காட்டு ராஜா...
’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, கிராமத்து பின்னணியில் அமைந்த உயிரோட்டமுள்ள கதைகளை இயக்கி, மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கிய கரிசல்காட்டு ராஜா...

பரட்டை, மயிலு, சப்பாணி, பொன்னாத்தா, சின்னப்பதாஸ், கருத்தம்மா, பாலுத்தேவர் என்று, தமது திரைப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் பெயர்களை அழியாச் சின்னமாக்கிய திரைச்சிற்பி.
வேட்டி கட்டத் தெரியாத கதாநாயகர்களையும் தமது திரைப்படங்களில் வேட்டி கட்ட வைத்து தமிழழகு பார்த்து மகிழ்ந்தவர் பாரதிராஜா.

கிராமத்தை நோக்கி...
ஆனால், பாரதிராஜாவை பொறுத்தவரை அவர் ஒரு ஜீன்ஸ் காதலன். கதாநாயகனாக அவரே நடித்து இயக்கிய கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில்கூட ஜீன்ஸ் அணிந்தே தோன்றியிருப்பார் பாரதிராஜா. கேமராவின் கண்களை கிராமத்தை நோக்கி பார்க்க வைத்த பாரதிராஜா, சூதுவாது தெரியாத கிராமத்து கதாபாத்திரங்களை தமது திரைப்படத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியவர்.
மாட - மாளிகை, கூட - கோபுரங்கள் மட்டும் அழகல்ல, ஆடு, மாடு, கோழியும், வாய்க்கால்- வரப்பும், வயல்வெளிகளும் அழகுதான் என்பதை மண்வாசனை மாறாமல் படம்பிடித்து காட்டியவர்.

திரைமொழியை தகர்த்த புரட்சியாளர் பாரதிராஜா
திரைத்துறைக்கு என்று எழுதப்படாத திரைமொழியை தகர்த்து, பேச்சுமொழி தான் திரைமொழி என்பதை தம்முடைய திரைப்படங்கள் மூலம் இலக்கணமாக்கிய பட்டிக்காட்டு மேதை. சினிமா என்னை சென்னைக்கு அழைத்து வந்தது; நான் சினிமாவை என் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றேன் என்று பெருமையோடு கூறும் பாரதிராஜா, தமிழ் சினிமாவின் அடையாளத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர்.

பத்மஸ்ரீ பட்டத்தை திருப்பி அனுப்பிய ரோசமிக்க இன உணர்வாளர்
2009 ஏப்ரல் மாதம் ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டம். தொப்புள்கொடி உறவுகளான இலங்கை தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்கு மத்திய அரசுதான் காரணம் என குற்றம்சாட்டிய பாரதிராஜா, தமிழன் என்பதற்கு இணையான நாற்காலி எதுவும் கிடையாது எனக் கூறி, தமக்கு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய ரோசமிக்க தமிழின உணர்வாளர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved