Also Watch
Read this
By: Manigandan Raja

அரசு முடிவு செய்துள்ளதாக தூதர் யானிவ் ரேவாச் தகவல் :
இஸ்ரேலில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிரம்மாண்ட சிலையை நிறுவ அரசு முடிவு செய்துள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் யானிவ் ரேவாச் தெரிவித்து உள்ளார். இந்த சிலையை சிவாஜி மகாராஜின் வரலாற்று பெருமைக்கு நிகராக வடிவமைக்க தேவையான வரலாற்று தரவுகள் மற்றும் கலை ஆலோசனைகளை வழங்குமாறு மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிசிடம் இஸ்ரேல் தூதரகம் உதவி கோரியுள்ளது.
இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ள அவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சிக்கு மஹாராஷ்டிர அரசு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் என தெரிவித்துள்ளார்.
9 வயது மகனுக்கு குணப்படுத்த முடியாத வியாதியால் விபரீதம் :

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 9 வயது மகனுடன் கீழே குதித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். லண்டனில் ஹைபாயிண்ட் என்கிற 45 மாடிகள் கொண்ட குடியிருப்பின் 36-வது மாடியில் உள்ள வீட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகேஷ் பாய், மனைவி அதிதி பரல்கர் மற்றும் 9 வயது மகனுடன் வசித்து வந்தனர்.
மகனுக்கு குணப்படுத்த முடியாத நோய் இருந்த நிலையில், இனி காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். இதனால் மனமுடைந்த தம்பதி, மகனுடன் சேர்ந்து குடியிருப்பின் 36-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக போராட்டம் :
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராட அழைப்பு விடுத்த ஜாயின்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி என்ற அமைப்பிற்கு அரசு திடீரென தடை விதித்தது.
தடையை மீறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான முசாபராபாத், பர்னாலா ((Barnala)), பிம்பர் ((Bhimber)) ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான் :

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில், தக்க பதிலடி கொடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் கடற்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் AH - 64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி கடலில் விழுந்தது.
இந்த நிலையில், ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், ஹெலிகாப்டரில் இருந்த 2 பைலட்கள் மீட்கப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் :
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், 8 வீரர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பெஷாவர் நகரின் எல்லை பகுதியில் அமைந்துள்ள பிரதான பாதுகாப்பு சோதனை சாவடியில் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளால் தாக்குதல் நடத்தினர்.
இதில், 6 வீரர்கள் பலியான நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். பின்னர், சோதனைச் சாவடியில் இருந்த 8 வீரர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved