Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 10:08 AM
தூத்துக்குடி, விளாத்திகுளம் +2 மாணவி கொலை வழக்கில் முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்ததில், சாயல்குடியைச் சேர்ந்த நபர் பிடிபட்டு உள்ளார்.
ஜாமின் கையெழுத்து
ஜாமின் கையெழுத்து போடுவதாக விளாத்திகுளம் அருகே வந்த போது மாணவியை கொலை செய்த தர்ம முனீஸ்வரன், மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்ற போது பின் தொடர்ந்து சென்று வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். விளாத்திகுளம் +2 மாணவி கொலை வழக்கில் முனீஸ்வரன் கைது செய்யப்படுவதற்கு முக்கிய ஆதாரமாக காற்றாலை சிசிடிவி காட்சி இருந்துள்ளது. காட்டுப்பகுதி வழியாக பைக்கில் தப்பிச் செல்லும் காட்சிகள் காற்றாலை சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
பதற வைக்கும் பழைய வழக்கு
பிளஸ் டூ மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் குறித்து பகீர் தகவல் வெளியாகி உள்ளது. 2020ஆம் ஆண்டு மூதாட்டியை பாலியல் கொலை செய்த வழக்கில் சிறை சென்ற தர்ம முனீஸ்வரன். பெரிய குற்றங்களைச் செய்துவிட்டு சிறிய வழக்குகளில் சிக்கி சிறை சென்று வந்த தர்ம முனீஸ்வரன், கொலை செய்த உடன், பைக்கை திருடிவிட்டு சிறை சென்றால் சந்தேகம் எழாது என செயல்பட்டு உள்ளான்.
அதிர வைத்த சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த மார்ச் 10ஆம் தேதி மாலை இயற்கை உபாதைக்காக தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று தேடினர். இதனையடுத்து சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததது 11ஆம் தேதி காலை தெரிய வந்தது. இதனையடுத்து உடற்கூறாய்வுக்காக மாணவியின் சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைக்காகக் காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. குளத்தூர் காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்திற்குரிய நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், முனீஸ்வரன் சிக்கி உள்ளான்.
சிக்கிய குற்றவாளி
இந்த கொலை வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 30 வயதான தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. இந்த தர்ம முனீஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மாணவியை ஏன் கொலை செய்தார்? எப்படி கொலை செய்தார்? என்பது குறித்து போலீசா தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விரிவான விளக்கம் விரைவில் வெளியிடப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved