நகை கொள்ளை : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள பாம்புகோவில் சந்தை பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (58). அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவர் தனது மனைவி பார்வதி (48)மற்றும் மாமியார் மாரியம்மாளுடன் (85) ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் மாரியப்பன் வியாழன் அன்று மாலை வீரவநல்லூருக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.பாம்பு கோவில் சந்தை பகுதியில் முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை புர்கா அணிந்து வந்த நபர் ஒருவர் மாரியப்பன் வீட்டிற்கு வெளியே வந்து நின்றுள்ளார். அப்போது அங்கு வீட்டில் தனியாக இருந்த மாரியம்மாள் வீட்டில் ஆள் இல்லை என்று கூறி கிளம்புமாறு அந்த நபரிடம் சொன்னதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் விறுவிறு என வந்த புர்கா அணிந்த நபர் மூதாட்டி மாரியம்மாளை தரதர வென்று இழுத்து உள்ளே சென்று அவரை தாக்கியுள்ளார். அதன் பின்னர் மூதாட்டி சற்று மயக்கம் அடைந்து விடவே அங்கிருந்த பீரோ சாவியை எடுத்து அதிலிருந்து 35 பவுன் தங்க நகை மற்றும் 7 லட்ச ரூபாய் ரொக்க பணத்தை வந்திருந்த நபர் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அனைத்தும் சில நிமிடங்களில் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியோடு விசாரணை நடத்தியுள்ளார்கள். திருட்டு சம்பவம் குறித்து அறிந்த மாரியப்பன் அவரது மனைவி பார்வதியும் வீட்டிற்கு திரும்பி உள்ளார்கள். முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் பாம்பு கோவில் சந்தை பகுதியில் புர்கா அணிந்து சந்தேகம் ஏற்படாதவாறு வந்த ஒருவர் 35 பவுன் தங்க நகை மற்றும் 7 லட்ச ரூபாயை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது சம்பந்தமாக சொக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். Related Link சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி