Also Watch
Read this
தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத் திருத்தம் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாடு பாதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் இருந்தால் பழைய திமுகவை மீண்டும் பார்ப்பீர்கள் என்று, பாஜக அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். தொகுதி மறுவரையறை என்றால் என்ன? தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டுக்கு என்ன ஆபத்து? அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

ஐம்பது ஆண்டுகளாக...
தொகுதி மறுவரையறை விவகாரம் 50 ஆண்டுகளாக தீராத சர்ச்சையாக எழுந்து வருகிறது. இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. இது 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உருவாக்கப்பட்ட இடங்களாகும்.

முதன்முதலில் தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப்பட்ட போது, சமச்சீரற்ற நிலையில் மக்கள் தொகை இருந்ததால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் எனக் கருதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்தார். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறு சீரமைப்பை அமல்படுத்த முடிவு செய்த போதும், தென் மாநிலங்கள் பாதிக்கப்படக் கூடும் அபாயம் இருந்தது. இதனால், இந்திரா காந்தி வழியில் 2002ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசும் 25 ஆண்டுகளுக்கு அதாவது 2026 வரை ஒத்தி வைத்தது.

மீண்டும் தொகுதி மறுவரையறை
இந்த நிலையில் தான், தற்போதைய பாஜக அரசு மீண்டும் தொகுதி மறுவரையறையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. தொகுதி மறுவரையறையை அமல்படுத்தினால் தமிழ்நாட்டுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும். தற்போது புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் 40 எம்.பி. இடங்கள் இருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கையில் 8 லிருந்து 10 தொகுதிகள் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் அரசியல் பலம் நாடாளுமன்றத்தில் குறையும். ஏனென்றால், தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்வது தான். 1970ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. அந்த வகையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் வெகுவாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தி காட்டின.

வடமாநிலங்களில்...
அதே சமயம், வட மாநிலங்களில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே சென்றது. மக்கள் தொகை கட்டுப்பாட்டில் நேர் எதிரில் வட மாநிலங்களும், தென் மாநிலங்களும் இருந்தன. அதன்படி, தற்போதைய சூழலில் தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்தாலும் தென் மாநிலங்கள் தான் பாதிக்கப்படக் கூடும் என்ற நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட திருத்தத்தை நிறைவேற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்டியிருக்கிறது மத்திய பாஜக அரசு. ஏப்ரல் 16ஆம் தேதி தொகுதி மறுவரையறை சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்படும் என கூறப்படும் நிலையில், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

முதல்வர் வெளியிட்ட வீடியோ
தேர்தல் பிரச்சாரத்திற்காக நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தாலும், கடமையை தவிர்க்க முடியாது என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்கு மத்தியிலும் வலுக்கட்டாயமாக தொகுதி மறுவரையறையை அமல்படுத்த போகிறார்கள் என்றார். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட யார் கேள்வி கேட்டாலும் எந்த பதிலும் சொல்லாமல் அவசர அவசரமாக தொகுதி மறுவரையறையை அமல்படுத்துவது அப்பட்டமான மாநில விரோத செயல் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில உரிமைகளை படுகொலை செய்திருக்கிறார்கள் என்றார்.

தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்
தமிழ்நாட்டை பாதித்து, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கும் வகையில், தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தம் இருந்தால், தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு குடும்பமும் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்தும் என்றார். தேர்தல் நேரத்தை பயன்படுத்தி தொகுதி மறுவரையறையை அமல்படுத்த நினைத்தால், இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை பார்க்க வேண்டியிருக்கும் என்ற முதலமைச்சர், 50, 60களில் பார்த்த திமுகவை மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும் எனவும் கூறினார்.

ஆபத்து இருக்கிறதா? இல்லையா?
மேலும், தேர்தல், ஆட்சி அதிகாரத்தை தாண்டி கொள்கைகளும், மாநில உரிமைகளும் தான் திமுகவுக்கு முக்கியம் என்பதால், தமிழ்நாட்டுக்கு தவறு இழைக்க நினைத்தால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என பிரதமர் மோடியை குறிப்பிட்டு இறுதி எச்சரிக்கை கொடுத்துள்ளார். தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டுக்கான தொகுதி எண்ணிக்கை உயரும் என பாஜகவினரும், தமிழ்நாட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூறினாலும், எந்த அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட இருக்கிறது? என்பதை மத்திய அரசு இன்னும் விளக்கவில்லை. இதனாலேயே, தொகுதி மறுவரையறை மூலம் ஆபத்து இருக்கிறதா? இல்லையா? என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved