Also Watch
Read this
By: Manigandan Raja
திருப்பூரில் திருமணமான மூன்றே மாதத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருவுற்ற மனைவியை கல்லூரிக்கு செல்ல விடாமல், வீட்டிலேயே முடக்க நினைத்தது தான் தற்கொலைக்கு காரணம் என பகீர் தகவலும் வெளியாகி உள்ளது.

19 வயதில் திருமணம்
மஞ்சள் மணம் மாறாத மங்கல நாணை கூட பிரிக்காத நிலையில், புதுமணப்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் விகாஸ் கண்ணன். 30 வயதான இவர், திருமண வரன் கிடைக்காத விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தான், தங்களின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான, கன்னாங்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரது மகள் சோஃபியாவை மணமுடித்து தருமாறு, விகாஸ் கண்ணனின் குடும்பம் அணுகியதாக கூறுகின்றனர்.


மூன்று மாதங்களுக்கு முன் திருமணம்
சோஃபியாவுக்கு வெறும் 19 வயது தான் ஆகிறது, அதுவும் இப்போது தான் பி.காம். இரண்டாம் ஆண்டு படிக்கிறாள் என்று, முதலில் தயக்கம் காட்டிய சோஃபியாவின் பெற்றோரிடம், வரதட்சணை ஏதுமின்றி தங்கள் சொந்த செலவில் திருமணம் நடத்தி, பெண்ணுக்கு தாங்களே நகைகளை போட்டு திருமணம் செய்து கொள்வதாக விகாஸ் வீட்டினர் கூறியிருக்கின்றனர். இதனை ஏற்று சோஃபியாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்க, மூன்று மாதங்களுக்கு முன் திருமணமும் நடந்தேறியிருக்கிறது.

உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம்
திருமணம் ஆன நாளில் இருந்தே விகாஸ் கண்ணனுக்கும் சோஃபியாவுக்கும் ஏழாம் பொருத்தமாக தான் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக சோஃபியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. பின்னர், விகாஸ் கண்ணன் நேரில் சென்று சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களிலேயே சோஃபியா கருவுற்றிட, விகாஸ் கண்ணனும், அவரது பெற்றோரும் கல்லூரிக்கெல்லாம் இனி போக கூடாது என கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபத்துடன் தனது அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்ட சோஃபியா, தனது உயிரை மாய்த்துக் கொண்டார். உடனடியாக கதவை உடைத்து சோஃபியாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரது உயிர் பறிபோனது. மகளின் மரண செய்தியறிந்து மருத்துவமனைக்கு பதறியடித்துக் கொண்டு வந்த பெற்றோர் கதறி துடித்தனர். திருமணம் நடந்து மூன்று மாதங்களே ஆனதால் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.


ஆர்.டி.ஓ. விசாரணை
இந்நிலையில், சோஃபியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்களும் கல்லூரி நண்பர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு பூ வைத்து சென்றால் கூட கணவர் வீட்டார் சந்தேகப்பட்டு சோஃபியாவை தகாத வார்த்தைகளில் பேசி வந்ததாகவும், மெண்டல் டார்ச்சர் கொடுத்து தனது மகளை கொன்று விட்டதாகவும் பெண்ணின் தாய் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, சோஃபியாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், ஆர்.டி.ஓ. விசாரணையை விரைந்து முடித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved