Also Watch
Read this
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே காலை நேரத்தில் காங்கிரஸ் நிர்வாகியை அவரின் வீட்டின் முன்பு, மர்ம கும்பல் காரில் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் தான் உயிரோடு விடுவோம் என துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல், பாதி வழியில் ஆள் மாறிப் போனது தெரிந்து காட்டுப் பகுதியில் இறக்கி விட்டு தப்பியது அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

வெளியான வீடியோ காட்சி
காங்கிரஸ் நிர்வாகியை ஆள் மாறி கடத்தியது தெரியாமல் வந்த வேலை முடிந்தது என கடத்தல் கும்பல், மின்னல் வேகத்தில் காரில் சீறிப் பாய்ந்த காட்சி, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சிங்காநல்லூர் அருகே எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன்.
காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு மாவட்ட தலைவரான இவர், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் ஞாயிற்று காலை தனது வீட்டின் வெளியே காரை கழுவிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த காரில் இருந்து இறங்கிய இருவர், நேராக அவரிடம் சென்று உங்கள் பெயர் தனசேகரனா? என கேட்டுள்ளனர். பார்ப்பதற்கு டிப் டாப் ஆக ஆடை அணிந்திருந்ததால் கட்சி வேலை அல்லது காரை விற்க வந்திருப்பார்கள் என நினைத்து, தனசேகரன் ஆமாம் என தலையை ஆட்ட, உடனே கை விலங்கை எடுத்து அவரின் கைகளில் போட முயற்சி செய்துள்ளனர்.

மின்னல் வேகத்தில் கடத்தல்
கை விலங்கு போட முயற்சித்ததும் பதறிப் போன தனசேகரன், கையை உதறி விட்டு, யார் நீங்கள்? என்று கேள்வி கேட்டபடியே அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தார். அதற்குள் காரில் இருந்து இறங்கி ஓடி வந்த மேலும் மூவர், தனசேகரனை சூழ்ந்து கொண்டு வாயை துணியால் அடைத்து கடுமையாக தாக்கினர். பின்னர் அவரை தரதரவென இழுத்துச் சென்று காரின் பின்பக்க சீட்டுக்கு இடையே படுக்க வைத்த கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து எஸ்கேப் ஆனது.

ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம், அதிலும் காலை 7 மணி என்பதால் அக்கம் பக்கத்தினர் யாரும் வெளியே வராத நிலையில், சத்தமே இல்லாமல் தனசேகரனை கடத்திக் கொண்டு மின்னல் வேகத்தில் காரில் பறந்து சென்றது கடத்தல் கும்பல். அங்கிருந்து நேராக பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையை பிடித்து கேரளத்திற்கு தப்ப முயற்சித்த நிலையில், வழி நெடுகிலும் தனசேகரனை அடித்த உதைத்த கும்பல், 2 கோடி ரூபாய் பணம் கொடுக்காவிட்டால் கொன்று விடுவோம் என துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளது.

ஆள் மாறிப் போனது...
ஆனால் யார்? என்ன? என்று தெரியாமல் பணம் கொடுக்க மாட்டேன் என தனசேகரன் பிடிவாதமாக இருந்ததால், அவரை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் மற்றொரு நபருக்கு அனுப்பியது அந்த கும்பல். அப்போது தான் ஆளை மாற்றிக் கடத்தியது தெரிய வந்தது. போட்ட திட்டம் எல்லாம் பாழாய் போனதால் பதறிப் போன கடத்தல் கும்பல், உடனே நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறி அருகே இருந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்தது. அங்கு வைத்து தனசேகரனிடம் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் மற்றும் அவரின் கார் சாவியை பறித்துக் கொண்ட கும்பல், இதனை வெளியில் சொன்னால் வீடு தேடி வந்து கொலை செய்வோம் என பகிரங்கமாக எச்சரித்து விட்டு தப்பிச் சென்றது.

காவல்துறை விசாரணை
ஏன் கடத்தினார்கள்? எதற்கு விட்டுச் சென்றார்கள்? என எதுவும் புரியாமல் விழி பிதுங்கி நின்ற தனசேகரன், நெடுஞ்சாலையில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டு வீடு திரும்பினார். நடந்ததை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என கடத்தல் கும்பல் மிரட்டியதால் என்ன செய்வது? என்று தெரியாமல் குடும்பமே பயத்தில் இருந்த நிலையில், ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார் தனசேகரன். நடந்த சம்பவத்தை கேட்டு ஆடிப் போன காவல்துறை, உடனே அவரது வீடு மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணையை துவங்கியது.

குழப்பம்... கடத்த முயன்றது யாரை?
பட்டப்பகலில் அருகருகே வீடுகள் இருக்கும் பகுதிக்குள் புகுந்து தைரியமாக ஒருவரை மர்ம கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதிலும் ஆள் மாறி கடத்தி விட்டார்கள் என்றால், உண்மையில் அந்த கும்பல் கடத்த முயன்றது யாரை?என்பது தெரியாத நிலையில், அவரை தேடி மீண்டும் அந்த கும்பல் வரலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதேபோல், செல்போனில் அந்த கும்பல் பேசியது யாரிடம்? என்று தெரியாத நிலையில், கிடைத்த சிசிடிவி காட்சியிலும் காரின் பதிவு எண் தெளிவாக பதிவாகவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் விசாரணையை எங்கிருந்து தொடங்குவது என தெரியாமல் காவல்துறை குழம்பி போயிருக்கும் நிலையில், மீண்டும் ஒரு கடத்தல் சம்பவம் நடப்பதற்குள் அவர்களை தேடி பிடிக்க வேண்டும் என்பதே கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது.