Also Watch
Read this
தவெக ஆட்சி நடத்தும் லட்சணத்தை பார்த்து மக்களே கவிழ்த்து விடுவார்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசி உள்ளார். யார் தவெக எம்எல்ஏக்கள் என்று தெரிந்தால் தானே விலைக்கு வாங்க முடியும்? என குதிரை பேர குற்றச்சாட்டுக்கு பதிலடி தந்துள்ளார். தவெக அமைச்சர்கள் பலரும் குற்ற பின்னணி கொண்டவர்கள் என்றும்,
பிளாக்கில் லாட்டரி விற்றவர் எல்லாம் இன்றைக்கு அமைச்சர் என்றும் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் கலையரங்கத்தில், சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் மாதம் முழுவதும் நிகழ்ச்சியை கொண்டாடிய திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது;
4ம் தேதி தேர்தல் முடிவு வந்து, இரண்டு மாதங்கள் தாண்டிவிட்டோம். அண்ணா அறிவாலயம் மற்றும் எனது இல்லத்தில் நிர்வாகிகள் அனைவரையும் காலையும் மாலையும் சந்தித்து வருகிறேன். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கிறேன். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கலந்து கொள்ளும் முதல் கட்சி கூட்டம் இது.

தொட்டுக்கூட பார்க்க முடியாது
நாம் என்றைக்கும் மக்களோடு இருப்போம். வெற்றியோ தோல்வியோ வீதிக்கு வந்து போராடக் கூடியவர்கள் தான் கலைஞருடைய தொண்டர்கள். வெற்றி பெற்று இருந்தாலும் ஆடியதும் கிடையாது, தோல்விகளால் வீட்டில் முடங்கியதும் கிடையாது. என்றைக்கும் மக்கள் பணிக்கு முக்கியத்துவம் கொடுப்போம். நாம் பார்க்காத வெற்றி கிடையாது, தோல்வி கிடையாது. அதிமுக கட்சியை பாதியாக உடைத்து விட்டார்கள். ஆனால், எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது.

ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது
ஆளுங்கட்சியை விட திமுக எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். திமுகவை மட்டும் தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை, அதனால் தான் பொய் வழக்கு போடுகிறார்கள். தமிழக வெற்றி கழகம், திமுகவின் திட்டங்களை தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக வெற்றி கழகத்தினர் எதற்கு எடுத்தாலும் ரீல்ஸ் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்களோ அந்த தொகுதிகூட தெரியாமல் வேறு தொகுதிக்கு சென்று நன்றி தெரிவிக்கிறார்கள்.

மக்களே கலைத்து விடுவார்கள்
சட்டமன்றத்தில் பார்க்கும்போது, எதிரில் இருக்கும் ஒரு அமைச்சர் திருட்டு விசிடி விற்பவர், ஒரு அமைச்சர் பிளாக்கில் டிக்கெட் விற்றவர். மற்றொருவர் லாட்டரி டிக்கெட் விற்பவர். நீங்கள் பொய் வழக்கு போடுகிறீர்கள். உங்கள் தாத்தா வந்தாலும் வழக்குகளுக்கு பயப்படுபவர்கள் திமுகவினர் அல்ல. அடுத்த கட்சியில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு இழுத்து கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியை கலைக்க பார்ப்பதாக சொல்கிறார்கள். நாங்கள் ஏன் கலைக்க வேண்டும்? மக்களே கலைத்து விடுவார்கள்.

எதிரி தெரியவில்லை
முதலமைச்சர் சட்டமன்றத்தில் ஊழல் செய்தவர்களை நாங்கள் விட மாட்டோம் என்று சொன்னார். ஊழல் செய்தவர்கள் தான் அவருடைய கட்சிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். தேர்தலில் யார் எதிரி? என்று தெரியாமல் போய்விட்டோம். ஆனால் இப்போது தெரிந்து விட்டது. ரோட்டில் சென்று ஓட்டு கேட்டோம் , ஆனால் வீட்டுக்குள் சென்று ஓட்டு கேட்காமல் விட்டு விட்டோம். அடுத்த தேர்தலில் சும்மா விட மாட்டோம்.

நம் கட்சியின் கூட்டணியில் இருந்து நம் வாக்குகளை பெற்று அமைச்சர்களாகவே சிலர் ஆகிவிட்டனர். தவறுகளை மக்களிடம் கொண்டு செல்வோம். தமிழ்நாட்டில் மறுபடியும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.