Also Watch
Read this
By: Web Team

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சென்னைப் பெருநகரில் 9 ஆயிரத்து 100 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட தகவல்:
79ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். இதனால், புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 100 பேர், சிறப்பு பாதுகாப்பு பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலையம், ரயில் மற்றும் பேருந்து முனையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில், கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொண்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர் முழுவதும் நான்கு மற்றும் இரு சக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்பு அமைத்து தீவிர வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டும், பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேக நபர்களின் நடமாட்டம், கேட்பாரற்ற வாகனங்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved