Also Watch
Read this
சிவகங்கை அருகே உறவுக்கார பெண்ணே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து, நகைகளை திருடி காருக்குள் வைத்துவிட்டு நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக சடலத்தின் மீது சர்க்கரையை தூவி, தடயத்தை அழிக்க முயன்ற கள்ளக்காதல் ஜோடி, கொ*க்கு பயன்படுத்தப்பட்ட போர்வை முதல் மூதாட்டியின் செல்போன் வரை ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக வீசியபோதும்கூட சம்பவம் நடந்த ஐந்தே மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நகைகள் மீது பார்வை
சிவகங்கை மாவட்டம், மு.சூரக்குடி வடக்கன்வளைவு பகுதியை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. கணவனை இழந்த இவர், தனது 2 பிள்ளைகளுடன் சென்னையில் வாழ்ந்து வரும் நிலையில், உறவினருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார். தனது கள்ளக்காதலனான சரவணன் என்பவரை டிரைவர் எனக்கூறி, காரில் அழைத்து வந்த சாமுண்டீஸ்வரி தனது உறவினரான பூச்சியம்மாள் வீட்டிற்கும் அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
மூதாட்டியின் மகளும், மகனும் சென்னையில் வசித்து வருவதால் தனது கணவர் மாதவனுடன் அவர் வாழ்ந்து வருகிறார். கடன் பிரச்சினையில் இருந்த சரவணனுக்கு பூச்சியம்மாள் கழுத்து நிறைய அணிந்திருந்த நகைகள் மீது பார்வை திரும்பியது. அந்த நகைகளை திருடினால் கடன் பிரச்சினை தீர்ந்து நிம்மதியாக வாழலாம் என சரவணன் கூற, முதலில் மறுத்த சாமுண்டீஸ்வரி ஒருகட்டத்தில் ஒப்புக்கொண்டார்.

சடலத்தின் மீது சர்க்கரை...
’நாம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்,’ என மூதாட்டியை வலுக்கட்டாயமாக அழைத்த சாமுண்டீஸ்வரி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து போர்வையால் முகத்தை அழுத்தியும், மூச்சை திணறடித்தும் கொ* செய்துள்ளார். மூதாட்டியின் பத்தரை சவரன் நகைகளை கழற்றி காருக்குள் வைத்த இருவரும் அவரது சடலத்தை வீசுவதற்காக சாக்குமூட்டையில் கட்டி உள்ளனர். ஆள்நடமாட்டம் குறைவதற்காக நள்ளிரவு வரை காத்திருந்த சரவணனும், சாமுண்டீஸ்வரியும், மூதாட்டியை கால்வாய் ஒன்றில் தூக்கி வீசியதோடு, சடலத்தின்மீது சர்க்கரையையும் தூவி உள்ளனர். எறும்புகள் சடலத்தின் மீது மொய்த்து தடயங்களை அழித்துவிடும் என யூடியூபில் பார்த்த வீடியோக்களால் சர்க்கரையை தூவி உள்ளனர்.

உங்கள் வீட்டுக்கு தானே வந்தார்...
மூதாட்டியின் செல்போனை ஊரணிக்குள்ளும், செருப்பை வயலிலும் வீசிய இருவரும் கொ*க்கு பயன்படுத்திய போர்வை, சாக்கு பைகள் என ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிகளில் வீசி உள்ளனர். காரணமே இல்லாமல் காளப்பூர் வரை காரில் சுற்றிவிட்டு மீண்டும் ஊருக்குள் வந்த கள்ளக்காதல் ஜோடி உறவினர்களுடன் சேர்ந்து மூதாட்டியை தேடுவதுபோல் நடித்துள்ளனர். ’உங்கள் வீட்டுக்கு தானே பூச்சியம்மாள் வந்தார்,’ என கணவர் மாதவன் கேட்க, போலீசாரின் விசாரணை கோணம் அவர்கள் பக்கமே ஆழமாக திரும்பியது. மூதாட்டி தங்கள் வீட்டுக்கு வந்துவிட்டு உடனே சென்றுவிட்டதாக எவ்வளவோ மழுப்பி பார்த்தும், மாதவன் தான் சொன்ன வார்த்தையில் இருந்து பின்வாங்கவில்லை.

ஐந்து மணி நேரத்திலேயே...
மோப்ப நாய் லைலாவும் சாமுண்டீஸ்வரியின் வீட்டில்போய் படுத்துக்கொள்ள அங்குள்ள காரை சோதனையிட்டனர் போலீசார். காருக்குள் இருந்து மூதாட்டியின் பத்தரை சவரன் நகைகளை போலீசார் மீட்க, அதற்குமேல் சமாளிக்க முடியாத சாமுண்டீஸ்வரியும் சரவணனும் கொ* செய்தது முதல் எப்படி செய்தோம் என்பதுவரை ஒப்புக்கொண்டனர். கொ* நடந்த 5 மணி நேரத்திலேயே சிக்கிய இருவரும் தற்போது ஜோடியாக கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.