Also Watch
Read this
By: Manigandan Raja

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ஆம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் ஶ்ரீநமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் மடம் உள்ளது.
திருவாவடுதுறை ஆதீர மடத்தில் உள்ள, ஸ்ரீ அதுல்யகுஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக 5-ஆம் நாள் திருவிழாவான இன்று, திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளித்த ஐதீக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடைய திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தங்கி தரிசனம் செய்து வந்தார். அப்போது அவரது தந்தை சிவபாதஇருதயன் உலக நன்மைக்காக தான் ஏற்பாடு செய்திருந்த யாகத்திற்கு, திருஞானசம்பந்தரிடம் பொருளுதவி கேட்டு திருவாவடுதுறை வந்தார்.
இதனையடுத்து திருஞானசம்பந்தர், கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் உலவாக்கிழி பதிகம் பாடி ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பொற்கிழி பெற்றதாக ஐதீகம். இந்த ஐதீகத்தை போற்றும் வகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திருஞானசம்பந்தர் உற்சவமூர்த்திகள் பல்லக்கில் வீதியுலா வந்து கோமுக்தீஸ்வரர் ஆலயத்திற்கு எழுந்தருளினார்.
அங்கு உலவாக்கிழி பதிகத்தை ஓதுவார்கள் பாடினர். தொடர்ந்து ஆலயத்திலிருந்து பூதகணம் பொற்கிழியை சுமந்து வந்து, பலி பீடத்தில் வைத்து, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புராண சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீன 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, திருமுறை இசை அறிஞர்கள் 5 பேருக்கு தலா ரூ.5ஆயிரம் அடங்கிய பொற்கிழியை வழங்கி ஆசியுரை வழங்கினார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள் : டி20 தொடரிலும் இந்தியாவை வீழ்த்துவோம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved