Also Watch
Read this
Posted on: Jan 29, 2026 07:30 AM
By: Manigandan Raja
விருதுநகர் அருகே சீனியர் மாணவரை காதலித்து, அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட மாணவி, கல்லூரி முதல்வர் கடுமையாக திட்டி அசிங்கப்படுத்தியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடைசியாக சீனியர் மாணவருக்கு, மாணவி உருக்கமாக மெசேஜ் அனுப்பி உள்ள நிலையில், கல்லூரி முதல்வரின் உதவியாளர் செய்த சகுனி வேலை தான், மாணவியின் விபரீத முடிவுக்கே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காதல் அவ்வளவு பெரிய குற்றமா?
முகம் நிறைய சிரித்துக்கொண்டிருந்த மாணவியின் உயிர் பறிபோக கல்லூரி முதல்வரும், அவரது உதவியாளரும் தான் காரணம் என குற்றம் சாட்டும் பலரும், தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு காதல் அவ்வளவு பெரிய குற்றமா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆசாரி காலனியை சேர்ந்த சோலைராணி அங்குள்ள அய்யநாடார் ஜானகியம்மாள் என்ற தனியார் கல்லூரியில் பிசிஏ 2ஆம் ஆண்டு படித்தார். கடந்த ஆண்டு தனது கல்லூரியில் பயின்ற ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, குறிப்பிட்ட அந்த சீனியர் மாணவருடன் சேர்ந்து மாணவி புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வைத்ததாகவும் தெரிகிறது.
தாய் மற்றும் மகளிடம் மன்னிப்பு கடிதம்
மாணவியின் இன்ஸ்டா ஐடியை ஏற்கெனவே ஃபாலோ செய்திருந்த, கல்லூரி முதல்வரின் உதவியாளர் மணிமாறன், அந்த ஸ்டோரியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கல்லூரி முதல்வர் அசோக்கிடம் காட்டியதாக சொல்லப்படுகிறது. அதனை பார்த்து கோபமடைந்த அசோக், மாணவியின் தாய் முருகேஸ்வரியை நேரில் அழைத்து, கல்லூரிக்கு படிக்க தானே அனுப்புறீங்க? வந்த வேலையைவிட்டுவிட்டு காதல் செய்து கொண்டிருந்தால் மற்ற மாணவிகளும் உங்கள் மகளை பார்த்து கல்லூரியில் காதல் செய்யமாட்டார்களா? இனிமேல் இதுபோன்று காதல் செய்வது, போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டால் டிசி-யை கொடுத்துவிடுவேன் என மிரட்டி கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. அப்போது, தாம் காதலித்தது உண்மைதான், அந்த போட்டோ ஓராண்டுக்கு முன்பு எடுத்தது, அதுவும் கேம்பசுக்கு வெளியே எடுத்தது என மாணவி கூறியும் முதல்வர் திட்டியதாகவும், தாய் மற்றும் மகளிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாக சொல்லப்படுகிறது.
சீனியர் மாணவருக்கு கடைசியாக மெசேஜ்
இந்நிலையில், தன் கண்முன்னேயே தாய் கூனிக்குறுகி முதல்வரிடம் நிற்பதை பார்த்து மனஉளைச்சலடைந்த மாணவி வீட்டிற்கு சென்று தனது காதலனான சீனியர் மாணவருக்கு கடைசியாக மெசேஜ் அனுப்பினார். அதில், தன்னை மணிமாறன் அசிங்கப்படுத்தி விட்டதாகவும், தன்னால் தனது தாயும் அசிங்கப்பட்டதாகவும் கூறிய மாணவி சோலைராணி, இனிமேல் தாம் கல்லூரிக்கே சென்றாலும் பிணமாகதான் செல்வேன், அதனால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறி கண்ணீர் எமோஜிகளையும் அனுப்பி இருந்தார்.
மாணவர்கள் போராட்டம்
அதன்பிறகு, கடந்த 20ஆம் தேதி இரவு தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டார் சோலைராணி. இந்த தகவலையறிந்த மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர், சோலைராணியை தற்கொலைக்கு தூண்டிய முதல்வர் மீதும், அதற்கு மூல காரணமாக இருந்த உதவியாளர் மணிமாறன் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 23ஆம் தேதி கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவுவரை தொடர்ந்த நிலையில், அனுமதியின்றி மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதாககூறி இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 7 பேர் மீது மல்லி காவல் நிலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை
இதனால், கொந்தளித்த மாணவ அமைப்பினர், மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது எப்படி வழக்குப்பதிவு செய்யலாம்? அதனை ரத்த செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன்பிறகு, டிஎஸ்பி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியபிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.
முதல்வர், உதவியாளர் கைது
இதுஒருபுறமிருக்க, மாணவியின் தற்கொலை விவகாரம் குறித்து கல்லூரியில் விசாரணை நடத்திய உயர் கல்வித்துறை மதுரை மண்டல துணை இயக்குநர் கலைச்செல்வி, முதல்வரின் உதவியாளர் மணிமாறனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி முதல்வர் அசோக், அவரது உதவியாளர் மணிமாறன் ஆகிய இருவர் மீதும் 108 BNS என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த நகர் காவல் நிலைய போலீசார், முதல்வர் அசோக்கை கைது செய்து சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுனில்ராஜாவிடம் ஆஜர்படுத்தப்படுத்தினர். இதையடுத்து முதல்வர் அசோக் ஜாமினில் வெளியே வந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிமாறனையும் போலீசார் கைது செய்தனர்.
கடுமையான நடவடிக்கை
இதுஒருபுறம் இருந்தாலும், பருவ வயதில் காதல் என்பது இயல்பாக தோன்றும் உணர்வுதான், சீனியர் மாணவருடன் மாணவி கேம்பசுக்கு வெளியே எடுத்த போட்டோவை வைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டி, மன்னிப்பு கடிதம் எழுதி வாங்க வேண்டிய அவசியம் இல்லையே எனக்கூறும் சமூக ஆர்வலர்கள், மாணவியின் போட்டோவை காட்டி அசிங்கப்படுத்துவதில் மணிமாறனுக்கு அப்படி என்ன அக்கறை? அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் எனவும் குரல் எழுப்பி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved