Also Watch
Read this
Posted on: Feb 10, 2026 10:55 AM
By: Manigandan Raja
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே அரசு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் டான்ஸ் ஆட தயாராகி கொண்டிருந்த மாணவி, விஷப்பூச்சி கடித்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதால் மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஒட்டு மொத்த கிராமமும், சிறுமியின் மரணத்தால் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
பள்ளியின் நூற்றாண்டு விழா
டான்ஸ் நிகழ்ச்சியை பார்க்க கண்டிப்பாக வர வேண்டும் என அடம் பிடித்து விட்டு சென்ற சிறுமி, பிணவறையில் மூச்சு பேச்சு இல்லாமல் படுத்திருந்ததை கண்டு கதறி துடிக்கும் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே குமரமங்கலத்தில் ஊராட்சி நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் - தனலட்சுமி தம்பதியின் 2வது குழந்தையான ரக்சிதா, 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை மிகப்பெரிய அளவில் கொண்டாட பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பள்ளியின் நூற்றாண்டு விழாவை தனியார் மண்டபத்தில் தடபுடலாக நடத்த, ஊர் மக்கள் அனைவரையும் கூட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
திடீரென மயங்கி விழுந்த ரக்சிதா
இந்த நூற்றாண்டு விழாவின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த ரக்சிதா தனது தோழிகளுடன் மண்டபத்தில் இறுதி ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த ரக்சிதாவின் கை கால் என உடல் முழுவதும் தடிப்பு தடிப்பாக வீங்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமிக்கு அடிக்கடி மூச்சுத் திணறல்
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் உயர் சிகிச்சைக்காக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என பள்ளி நிர்வாகம் கூறிய தகவலை கேட்டு பயத்தில் அடித்து பிடித்து மருத்துவமனைக்கு ஓடி சென்ற பெற்றோர், ரக்சிதா இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதை கேட்டு கதி கலங்கி போயினர்.
தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும்
தனியார் மண்டபத்தில் டான்ஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விஷ பூச்சி கடித்ததே சிறுமி உயிரிழந்ததற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால், இதனை உறுதிப்படுத்தாத போலீசார் பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே உண்மை தெரிய வரும் என்கின்றனர். மாற்றுத் திறனாளியான மாதேஸ்வரன் சிறு சிறு கூலி வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், மகளின் இறப்பால் ஒட்டு மொத்த குடும்பமும் சொல்லொண்ணா துயரில் மூழ்கி உள்ளது. இதனால் அக்குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved