Also Watch
Read this

அப்பாவைக் காணோம் என மு.க.ஸ்டாலினை விமர்சித்த விஜயைத்தான், முதலமைச்சரை காணோம் என பெரம்பூர் தொகுதி மக்கள் தேடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சாடி உள்ளார். தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கைக் காணோம், மின்சாரத்தைக் காணோம் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

நிர்வாகி இல்ல திருமண விழாவில்...
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
ஒவ்வொரு நாளும் நடைபெறும் இந்த ஆட்சியின் அவலங்களை எல்லாம், மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். அரசின் தவறுகளை, சறுக்கல்களை இளைஞர்கள் தட்டிக் கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், அந்த இளைஞர்களை கைது செய்யும் பணியை, இந்த சோபா மாடல் அரசு ஆரம்பித்து உள்ளது. இதுபோன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்ள நிச்சயம் நமக்கு நிறைய வழக்கறிஞர்கள் தேவை. அந்த வகையிலே, இந்த மேடையிலே நமக்கு இரண்டு வழக்கறிஞர்கள், அதுவும் ஜோடியான வழக்கறிஞர்கள் நம்முடைய இயக்கத்திற்கு கிடைத்துள்ளனர்.

தவெக ஆட்சி அமைந்த உடனேயே...
தூய சக்தி, தூய சக்தி என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தனர்? ஐந்தாவது நிமிடமே குதிரை பேரத்தை ஆரம்பித்து விட்டனர்.
பிற கட்சிகளுக்கு முதலில் சோபா போகும். சோபாவிற்கு பின்னாடியே நம்முடைய முதலமைச்சர் துரத்திக்கிட்டே போவார், சோபாவை
துரத்திக்கிட்டே போவார். அப்புறம், முதலமைச்சர் பின்னாலேயே அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாம் ராஜினாமா கடிதத்துடன், வரிசையில் நிற்பார்கள். இந்த காட்சி தான் ஒரு மாதமாக நடந்து வருகிறது.

மின்வெட்டு...
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின் வெட்டு தான். ஒரத்தநாடு போன்ற கிராம பகுதிகளில், நள்ளிரவில் மின்வெட்டு, தொடர்கதையாக இருக்கிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. அரசு அறிவித்த திட்டம் போதவில்லை என, விவசாயிகள் சாலைக்கு வந்து போராடி வருகின்றனர்.
விவசாயிகளை திமுக போராட தூண்டுவதாக, முதலமைச்சர் கொச்சைப்படுத்துகிறார். பயிர்க்கடன் தள்ளுபடி என வாக்குறுதி கொடுத்துவிட்டு, எதையும் நிறைவேற்றவில்லை. இதைவிட பெரும் கொடுமை, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு.

தமிழக சட்டசபையில்...
எங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம், இது சட்டமன்றமா? இல்லை சினிமா தியேட்டரா? இல்லை ஏதாவது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டோமா? என்று கேட்கிற நிலை வந்துவிட்டது. நம் தலைவர் செய்த பணிகளுக்கு இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். ஆனால், ஏதாவது பிரச்சினை என்றால், திமுகவே காரணம் என்கின்றனர்.

முதலமைச்சர் எங்கே?
நம்முடைய தலைவரை, முதலமைச்சர் தேடிக் கொண்டிருப்பதாக, சட்டமன்றத்தில் பேசுகிறார். இன்று, மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் திட்டம் மூலமாக, நம் தலைவர் தமிழ்நாடு முழுக்க இருக்கிறார். எங்கும் நிறைந்திருக்கிறார். நம் தலைவர் தினமும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடியவர். ஆனால், நம்முடைய முதலமைச்சருடைய பெரம்பூர் தொகுதி மக்கள் என்ன சொல்கின்றனர் தெரியுமா? "நாங்கள் எல்லாம் ஒருவரை தெரியாத்தனமாக ஜெயிக்க வைத்து விட்டோம், அவர் எங்கே போனார்? யாராவது பார்த்தீர்களா?" என்று கேட்கும் அளவுக்கு புலம்புகின்றனர்.

ஒட்டு மொத்த தமிழ்நாடும்...
இந்த ஆட்சியில், ஒட்டுமொத்த தமிழ்நாடும் யாரைத் தேடிக் கொண்டு இருக்கிறது. மின்சாரம், சட்டம் ஒழுங்கு என்று, எல்லாவற்றையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக நன்றாக இருந்த சட்டம் - ஒழுங்கை மக்கள் தேடுகின்றனர். சட்டமன்றத்தில் முதல்வர் நடனம் மட்டும் தான் ஆடவில்லை. அடுத்த கூட்டத் தொடரில் நடனமும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பேரிடரில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்காக, அனைவரும் கட்சியையும், தலைவரையும் மனதில் வைத்து ஒற்றுமையோடு உழைக்க வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.