Also Watch
Read this
By: Web Team

நாகையில், இன்று சனிக்கிழமை பிரச்சாரம் செய்த தவெக தலைவர் விஜய், திமுகவுக்கு பகிரங்கமாகவே சவால் விட்டுப் பேசியுள்ளார்.
பொது மக்கள் மத்தியில், விஜய் பேசி இருப்பதாவது:
அண்ணாவுக்கும் பெரியாருக்கும் வணக்கம். நாகூர் ஆண்டவர் அன்புடன், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி ஆசியோடு, கடல்தாய் மடியில் இருக்கும், என் மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
என்றைக்கும் மீனவ நண்பனான விஜய்யின் அன்பு வணக்கம். மீன் பிடி தொழில், விவசாயம் என உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் நாகப்பட்டினம். மத வேறுபாடு இல்லாத அனைவருக்கும் பிடித்துப் போன, மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உங்கள் அனைவருக்கும் சிறப்பான வணக்கம்.

நாகப்பட்டினத்தில், இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். அலையாத்திக் காடுகளை பாதுகாக்க வேண்டும். இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணத்தையும், தீர்வையும் மதுரை மாநாட்டில் பேசினேன். அதை விமர்சித்தார்கள். நான் இன்று நேற்றா மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறேன்.
இதே நாகையில் 2011ஆம் ஆண்டு, பிப்ரவரி 22ஆம் தேதி அன்று, இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினேன். விஜய் களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல. முன்பு, விஜய் மக்கள் இயக்கமாக வந்து நின்றோம். இன்று தவெக என்ற கட்சியாக வந்து நிற்கிறோம், மக்களோடு மக்களாக நான் என்றும் நிற்பேன்.

மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் வேளையில், நம் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்காகவும் நிற்பது நமது கடமை. மீனவர்கள் நலன் போல், ஈழத் தமிழர்கள் வாழ்க்கை முக்கியம். கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் திமுக அல்ல. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பிரித்துப் பேச நாம் பாஜகவும் அல்ல.
குடும்ப வளர்ச்சி தான் முக்கியமான வேலையாக இருக்கும் கட்சி, மக்கள் தாகம் தீர்க்க காவிரி நீரைக் கொண்டு வந்தார்களா? ஒரு அரசு கடல்சார் கல்வி பயிற்றும் கல்லூரி கொண்டு வந்திருக்கலாம். நாகையில், கடல் உணவுகள் சம்பந்தமாக எந்த தொழிற்சாலையையும் அமைக்கவில்லை.
நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவ மருத்துவர் இல்லையாம். நாகப்பட்டினம் புது பஸ் நிலையத்தை சுத்தமாக வைக்கலாம். இங்குள்ள ஸ்டீல் ரோலிங் மில்லை மூடிவிட்டார்கள். அதை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். மேலகோட்டை மேம்பாலம் கட்டி 50 வருடமாகி விட்டது, அதை புதுப்பிக்கலாம்.
நெல் மூட்டைகள் மழையில் சேதம் அடைகின்றன. சேமிப்புக் கிடங்கு கட்டியிருக்கலாம். செய்வோம்; செய்வோம் என்றார்கள், செய்தார்களா?. ஆனால், அனைத்தையும் செய்த மாதிரியே பெருமையாகச் சொல்வார்கள்.
ஒவ்வொரு முறை வெளிநாட்டு டூர் போய்விட்டு வரும்போதெல்லாம், சிஎம் சிரித்துக் கொண்டே வெளிநாட்டு முதலீடு என்பார். ‘சிஎம் சார்’ வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா?.

சனிக்கிழமை மட்டுமே மக்களை ஏன் சந்திக்கிறீர்கள்? என்கிறார்கள். உங்கள் அனைவரையும் பார்க்கும்போது, எந்தவிதமான தொந்தரவும் இருந்துவிடக் கூடாது என்பதாலேயே வார இறுதியில் சந்திப்பது என்று திட்டமிட்டோம். அதேபோல் அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமல்லவா?. அதற்காகவும் தான் ஓய்வு நாளில் பிரச்சாரம் செய்கிறேன்.
எனது கூட்டத்திற்கு, அனுமதி மறுப்புக்கான காரணம், சொத்தையாக உள்ளது. நான் பேசுவதே 3 நிமிடம் தான். அதற்கும் தடை. அதைப் பேசாதே, இதைப் பேசாதே என்று தடை. நான் எதைத்தான் பேசுவது?
நான் பேச சென்றபோது, அரியலூரில் பவர் கட், திருச்சியில், பேச ஆரம்பித்த உடன் ஸ்பீக்கருடன் இணைக்கப்பட்ட ஒயர் கட். சிஎம் சார், ஒரு பிரதமர், ஆர்எஸ்எஸ் தலைவர் வந்தால் இதுமாதிரி செய்வீர்களா? பேஸ்மென்ட் அதிரும்ல. நீங்கள் தான் அவர்களுடன் மறைமுக உறவுக்காரர்களாச்சே.
சிஎம் சார் மிரட்டிப் பார்க்கிறீங்களா? அதுக்கு விஜய் ஆளில்லை. என்ன செய்து விடுவீர்கள்?. கொள்கையை பெயருக்கு வைத்துக் கொண்டு, குடும்பத்தை வைத்துக் கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?
எனது கூட்டங்களுக்கு, மக்கள் நெருக்கடியாக நின்று கேட்கும் இடத்தைத் தான் ஒதுக்குகிறீர்கள். உங்கள் எண்ணம்தான் என்ன சார்?. நான் ஒரு அரசியல் தலைவன் என்பதை மறந்திடுங்க. தமிழ் மகனாக, என் மக்களை, என் சொந்தங்களை நான் பார்க்கச் சென்றால் என்ன செய்வீர்கள்?.
அப்பவும் தடை போடுவீர்களா? வேண்டாம் சார். இந்த அடக்குமுறை, அராஜக அரசியல் வேண்டாம் சார். நான் தனி ஆள் இல்லை சார். நான் மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் பெண்கள் சக்தியின் சகோதரன், மாபெரும் இளைஞர் இயக்கமாக இருக்கிறோம்.

மறுபடியும் சொல்கிறேன். 2026ஆம் ஆண்டில் இரண்டே இரண்டு பேருக்கு இடையே தான் போட்டியே. ஒன்று தவெக - இன்னொன்று திமுக.
பூச்சாண்டி காட்டுவதை எல்லாம் விட்டுவிட்டு, தில்லா, கெத்தா, நேர்மையா தேர்தலை சந்திக்க வாங்க. பார்த்துக்கலாம்.
கொள்கையை பெயருக்கு வைத்துக் கொண்டு, குடும்ப கூட்டணியோடு கொள்ளையடிக்கும் நீங்களா, இல்லை தமிழகத்தின் ஒவ்வொரு வீடுகளில் இருக்கும் நானா? என்று பார்த்து விடலாம்.

இனி மேல் தடை போட்டால், மக்களிடமே அனுமதி கேட்டுக் கொள்வேன். எனக்கு தடைபோடும் திமுக ஆட்சிக்கு வர வேண்டுமா? உங்களுக்கு நல்லது செய்ய வந்துள்ளவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா?
கேட்டதா மை டியர் சிஎம் சார். இந்தப் போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்கவிடாது. துரத்திக் கொண்டே வரும். தவெகவுக்கு வெற்றி நிச்சயம். நம்பிக்கையாக இருங்கள்.
இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.