Also Watch
Read this
திருச்சி கிழக்கு தொகுதியில், 16 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கார் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டிய உறவினர்கள், அவரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாரா? என திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநங்கையின் தங்கை
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இந்த சிறுமியின் அண்ணன் திருநங்கையாக மாறியவர் என்பதால் அருகில் உள்ள திருநங்கைகள் அவருக்கு பழக்கமாகி உள்ளனர். இதனால் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கும் அவர் சென்று வருவது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று அருகிலுள்ள திருநங்கை ஒருவரின் வீட்டிற்கு சிறுமி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திருநங்கையின் தாயாரை சிவகங்கைக்கு அழைத்து செல்வதற்காக மாரி செல்வன் என்ற கார் ஓட்டுநர் அங்கு வந்துள்ளார். சிறுமியை தனியாக அழைத்து பேசிய மாரி செல்வன், வெளியே போகலாம் என சிறுமியை காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

மயக்கத்தில் சிறுமி
சிறுமியும் கார் ஓட்டுநரை அங்கு அடிக்கடி பார்த்திருந்ததால் அவரை நம்பி உடன் சென்றதாக கூறப்படுகிறது. காரில் சென்ற சிறுமி சிறிது நேரத்திற்கு பிறகு கீரை கடை பகுதியில் போதையில் சுய நினைவின்றி கிடந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, அங்கு வந்த அவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அரை மயக்கத்தில் சிறுமி கூறியதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நான்கைந்து பேர்...
காரில் சிறுமியை அழைத்து சென்ற கார் ஓட்டுநர் மாரிசெல்வன், ஜுஸில் போதை தரும் ஏதோ ஒன்றை கலந்து கொடுத்து, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவருடன் நான்கைந்து பேர் உடன் இருந்ததாகவும் கூறியதை கேட்டு கொதித்து போயினர். வீட்டிற்கு அழைத்து போகச் சொல்லி கெஞ்சிய சிறுமியை, இதோ கூட்டிபோறேன் என சொல்லியே, காரில் வைத்தே சுற்றிய மாரி செல்வன், ஒரு கட்டத்தில் சிறுமி மயங்கியதும் அவரை பங்களா பகுதியில் இறக்கி விட்டு சென்றதும் தெரியவந்தது.

போக்சோ வழக்கு
இதனை கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள், ஓட்டுநர் மாரி செல்வனை பிடித்து சரமாரியாக தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர். இதில் காயமடைந்த மாரி செல்வனை மருத்துவமனைக்கு அனுப்பிய வைத்த போலீசார் அவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் சமாதானம்
அரசு மருத்துவமனையில் குவிந்த சிறுமியின் உறவினர்கள், மாரி செல்வன் மற்றும் அவருடன் இருந்தவர்களை கண்டறிந்து உரிய தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது தெருவில் ஒரு திருநங்கை வீட்டை கூட விட்டு வைக்காதீங்க, அடித்து நொறுக்குங்க, என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என்றவர்களை போலீசார் பேசி சாமாதானப்படுத்தினர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
காந்தி மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். எப்போதும் கலகலப்பாக இருக்கும் சிறுமி, கண்ணே தெரியவில்லை, வலிக்குது.. காப்பாத்துங்க என கதறுவதை கேட்டு கலங்கி போன உறவினர்கள், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved