Also Watch
Read this
"முட்டை நகரம்" என்று அழைக்கப்படும் நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சாமானிய மக்களின் புரதச்சத்து உணவாக இருக்கும் முட்டையின் விலை ஏன் இவ்வளவு வேகமாக உயர்கிறது? இதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்னென்ன? ஒரு முட்டையின் விலை 7 ரூபாயை தாண்டுமா?

முட்டைக்கு பெயர் பெற்ற...
நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், இதன் மூலம் நாளொன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 620 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே, கடந்த 14ஆம் தேதி நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை தற்போது 6 ரூபாய் 30 காசுகளாக அதிகரித்தது.

விலை உயர்வுக்கு காரணம்...
இந்த சூழலில், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கச் செயலாளர் சுந்தர்ராஜன் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், கடந்த மூன்று ஆண்டுகளில் எப்படி படிப்படியாக விலை உயர்ந்து உள்ளது என்பதை பகிர்ந்து உள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு முட்டையின் சராசரி கொள்முதல் விலை 5 ரூபாய் 3 பைசாவாக இருந்த நிலையில், அதுவே 2025ஆம் ஆண்டு 5 ரூபாய் 10 பைசாவாக உயர்ந்து, தற்போது நடப்பாண்டில் 5 ரூபாய் 13 பைசாவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். போக்குவரத்து செலவு மற்றும் உற்பத்தி செலவே முட்டையின் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், சந்தையில் முட்டைக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், விரைவில் ஒரு முட்டையின் விலை 7 ரூபாய் அல்லது அதற்கும் மேல் உயரும் என்று பண்ணையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கூடுதல் சுமை
தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலையை காரணம் காட்டி, லாரி உரிமையாளர்கள் சங்கம் முட்டை ஏற்றிச் செல்லும் லாரிகளின் வாடகையை சுமார் 25 விழுக்காடு வரை அதிரடியாக உயர்த்தி உள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் முட்டைகளை கொண்டு சேர்க்கும் லாரி வாடகை 25 சதவீதம் உயர்ந்ததால், பண்ணையாளர்கள் முட்டையின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதோடு, மட்டுமல்லாமல், கோழிகளுக்கான தீவன மூலப்பொருட்களின் விலையும் சந்தையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது பண்ணையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் முட்டை நுகர்வு அதிகம்
கேரளத்தில், தற்போது அமலில் இருக்கும் மீன்பிடி தடைக்காலம் முட்டை விலையை உச்சத்திற்கு கொண்டு செல்ல ஒரு காரணமாக அமைந்துள்ளது. கேரளத்தில் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு மீன் வரத்து சுத்தமாக குறைந்துவிட்டது. இதனால், கேரள மக்கள் மாற்று உணவாக முட்டையை அதிகமாக நுகர தொடங்கி உள்ளனர். கேரள சந்தையில் முட்டைக்கான Demand பல மடங்கு அதிகரித்து உள்ளதால், நாமக்கல்லில் இருந்து கேரளத்துக்கு செல்லும் முட்டைகளின் அளவு அதிகரித்துள்ளது. மறுபுறம், கோழிப்பண்ணை தொழில் பெருமளவில் வடமாநில தொழிலாளர்களை மட்டுமே நம்பி இயங்கி வருகிறது.

முட்டை விலை குறையுமா?
தற்போது ஏற்பட்டுள்ள தீவிர ஆள் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கோழிப்பண்ணை வேலைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பண்ணையில் 6 ரூபாய் 30 பைசாவாக விற்கப்படும் முட்டையின் விலை, வெளிச்சந்தையில் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் 7 ரூபாய் 50 பைசா முதல் 8 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும், இதனால், தினமும் காலையில் தலா ஒரு முட்டை சாப்பிட்ட குடும்பங்கள், இப்போது வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே முட்டை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாக சாமானிய மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதோடு, பண்ணையாளர்கள் முட்டையின் விலையை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தட்டுப்பாடு நிலவுவதால்...
அதிகரித்து வரும் தீவனச் செலவு, 25 சதவீத உயர்ந்த லாரி வாடகை, கேரளாவின் மீன்பிடி தடைக்காலம் ஆகிய அனைத்தும் சேர்ந்துதான் முட்டை விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. தற்போதைய, சூழலில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதால், நாமக்கலில் விரைவில் ஒரு முட்டையின் விலை 7 ரூபாய் அல்லது அதற்கும் மேல் உயர வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved