Also Watch
Read this
முதலமைச்சர் விஜய் கோட்-சூட் அணிவதும், அணியாததும், செஸ் விளையாடுவதும் செய்தியாக வருவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடி உள்ளார். தவெக ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளையும் முதலமைச்சர் படிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

ஆற்காடு வீராசாமி இல்ல திருமண விழா
சென்னை வானகரத்தில் நடைபெற்ற, திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
ஒரு வருடம் எனக்கு, ஆற்காடு வீராசாமி பக்கபலமாக இருந்து, ஒவ்வொரு நாளும் பல அறிவுரைகளை, ஆலோசனைகளை வழங்கினார். எங்கே என்று கேட்டால், சிறைச்சாலையில். 1976ல் நாங்கள் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்த போது அண்ணன் ஆற்காட்டார் எங்களோடு இருந்தார்.

வைரம் பாய்ந்த தொண்டர்...
பல்வேறு கொடுமைகள் எல்லாம், சென்னை சிறைச்சாலையில் நடைபெற்றது. இந்தக் கொடுமைகளிலும் சிக்கித் தவித்தவர் தான் அண்ணன் ஆற்காட்டார். அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல், இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், நான் சிறையில் நிம்மதியாக தெம்போடு, திராணியோடு இருந்தேன் என்று சொன்னால், அதற்கு அண்ணன் ஆற்காட்டார் காரணமாக இருந்தார் என்பதை பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.

இன்றைக்கும் என்னுடைய கையில் மிசா தழும்பு இருக்கிறது. அதேபோன்று அண்ணன் ஆற்காட்டார், இன்றைக்கும் ஒரு காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறையில் பட்ட அந்தக் கொடுமையின் காரணத்தினால் தான் இந்த நிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டார். அதனால் தான் வைரம் பாய்ந்த தொண்டர் என கலைஞர் கருணாநிதியால் அழைக்கப்பட்டார்.

இன்றைக்கு உள்ள ஆட்சியில்...
இன்றைக்கு சோசியல் மீடியாவை பார்க்கிறபோது, ‘கோட்’ போட்டு வந்தார்; கையில் டிஃபன் கேரியர் எடுத்து வந்தார்; வாட்ச் கட்டி வந்தார்; செஸ் விளையாடினார்; இன்றைக்கு கோட் போடவில்லை; பட்டு சட்டை வேஷ்டியில் வந்தார். இதெல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருந்தன.

அவைகள் எல்லாம் மறைந்து, நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பவரை பார்த்து நான் கேட்பதெல்லாம், தயவுசெய்து இன்றைக்கு உங்களைப் பற்றி, உங்கள் ஆட்சியை பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள். படித்து, அதில் இருக்கும் உண்மையைக் கண்டுபிடிங்கள். அதற்குரிய நடவடிக்கை எடுங்கள் என்பது தான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின், பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved