Also Watch
Read this
போலீசாருடன் வாக்குவாதம் செய்த நிலையில், ஆகாஷின் உடலை இறுதிச் சடங்கு செய்ய, பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்பு, 102 நாட்களுக்குப் பின் ஆகாஷின் உடல் எரியூட்டப்பட்டது. தனது மகன் ஆகாஷை கொன்றவர்கள் அழிந்து போவார்கள் என்று, அவரது தாயார் கதறியதோடு, காவல் துறையினரை நோக்கி மண்ணைத் தூற்றி சாபமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை விசாரணையில்...
மானாமதுரையில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஆகாஷ் உடல், 102 நாட்களுக்குப் பின்னர் அரசு சார்பில் தகனம் செய்யப்பட்டது. இதற்காக, மதுரை அரசு மருத்துவமனையின் பிணவறையில் இருந்து ஆகாஷ் உடலை எடுத்து வந்தபோது, காவல்துறை - ஆகாஷ் உறவினர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

2 பேரை வெட்டிய வழக்கு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் 24 வயதான ஆகாஷ் டெலிசன். அந்த பகுதியைச் சேர்ந்த இருவரை வெட்டிய வழக்கில், அவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் தாக்கியதில் அவரது கால் எலும்பு முறிந்ததாகக் கூறி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ஆகாஷ் கடந்த மார்ச் 8ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், உயர் நீதிமன்ற உத்தரவின்படி உடற்கூராய்வு செய்யப்பட்டது.

கொலை வழக்கு பதிவு
இந்த விவகாரத்தில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தொடர்புடைய காவலர்களைக் கைது செய்ய வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அப்போது தான் ஆகாஷ் உடலை பெற்றுக் கொள்வோம் என அவரது உறவினர்கள், பலகட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஆகாஷ் உடலானது, மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆகாஷ் உடலை அரசு சார்பில் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

உடல் எரியூட்டல்
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் தலைமையில், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆகாஷின் உடல் தகனம் செய்வதற்காக அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. அப்போது, அங்கிருந்த ஆகாஷ் உறவினர்கள், உடலை வெளியே கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர்களுக்கம் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, எதிர்ப்பு தெரிவித்த சுமார் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் பின்னர், ஆகாஷின் உறவினர்கள் முன்னிலையில், மதுரை தத்தனேரி மின் மயானத்தில் ஆகாஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved