Also Watch
Read this
By: Fyrose Banu

சீயோன் நகரில் நேற்று முன்தினம் இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பானது. இந்த சம்பவத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த மானாமதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூர் அழகர்சாமி ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

கைது செய்யப்பட்ட பட்ட்டதாரி இளைஞர்
இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஆகாஷ் டெலிசன்(26) மற்றும் குணா (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆகாஷ்டெலிசனை தேடும்போது கீழே விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவகங்கை அரசு மருத்துவமனை சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மூச்சுத் திணறலால் உயிரிழந்த ஆகாஷ்
இதையடுத்து ஆகாஷ்டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஆகாஷ் டெலிசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து ஆகாஷ்டெலிசனின் உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

அடித்துகொலை செய்துவிட்டதாக கண்ணீர்
இது குறித்து பேசிய ஆகாஷ்டெலிசனின் தாயார் ஆனந்தி மற்றும் தந்தை ராஜேஷ்கண்ணன் பேசியபோது உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு சொன்னாங்க இப்ப கொண்ணுட்டாங்க காவல்துறையினர் அடித்துகொலை செய்துவிட்டதாக கண்ணீர்விட்டு கதறியபடி கூறினர். இதையடுத்து தந்தை ராஜேஷ்கண்ணன் பேசியபோது எனது மகனை ஒரு வழக்கில் கைது செய்ய வேண்டும் என கூறி என்னையும் என் மனைவியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வைத்துக் கொண்டனர். பின்னர் எனது மகன் கிடைத்து விட்டதாக கூறி எங்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து எனது மகனுக்கு கால் முறிவு ஏற்பட்டதாக கூறி மானாமதுரையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தனர். அப்போது எனது மனைவி நேரில் சென்று பார்த்த போது காவல்துறையினர் அடித்ததாக ஆகாஷ் கூறியிருக்கிறார்.

அடித்து காலை உடைத்து தாக்கியதக குற்றச்சாட்டு
இந்த நிலையில் திடீரென இன்று காலை காவல்துறையினர் போன் செய்து எனது மகன் உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று காலில் கற்களை வைத்து அடித்து காலை உடைத்து தாக்கியுள்ளனர். என் மகன் மீது காவல்துறையினர் சாதிய ரீதியாக பேசி குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் அதனால் என் மகன் உயிரிழந்திருக்கிறான் என் மகன் தவறு செய்திருந்தால் அதற்கு தூக்கு தண்டனை கூட கொடுத்திருக்கலாம் இதுபோன்று அடித்து கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றொரு சம்பவம்
சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை சம்பவம் நடைபெற்று மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதே மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீண்டும் ஒரு இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆகாஷ் டெலிசனின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா உடலை பெற்றுக் கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அரசு மருத்துவமனை பிணவறை முன்பாக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved