Also Watch
Read this
By: Manigandan Raja

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, மாம்பட்டு மதுரா ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் மூலம் கிராம உதவியாளர் மகேஸ்வரி, உதவித்தொகை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் ரூ.6,000 அல்லது ரூ.3,000 வழங்க வேண்டும் என கேட்டதாக உமா மகேஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் கேட்ட தொகையான ரூ.3,000-ஐ வழங்கியதாகவும், ஆனால் இதுவரை எந்தவித மாற்றுத்திறனாளி உதவித்தொகையும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த உமா மகேஸ்வரி, இன்று போளூரில் நடைபெறும் வருவாய் ஜமாபந்தி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெறும் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகார் மனு அளித்தார்.
கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மீது உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என உமா மகேஸ்வரி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved