Also Watch
Read this
By: Manigandan Raja

நள்ளிரவில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு :
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பவானிபூர் தொகுதிக்கான பாதுகாப்பு அறையை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நள்ளிரவில் வந்து பார்வையிட்டார். அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மமதா நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு செய்தார்.
அப்போது மையத்திற்கு வெளியே திரிணாமுல் கட்சி தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆய்வு முடிந்து வெளியே வந்த மமதா, தொண்டர்களிடம் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மின்னணு எந்திரங்களை பாஜக திறக்க முயற்சியா?

மேற்கு வங்க மாநிலம் மணிகடலா ((Maniktala)) தொகுதிக்குட்பட்ட வாக்கு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாஜகவினர் திறக்க முயன்றதாகக் கூறி, ஸ்ட்ராங் ரூமிற்கு வெளியே திரிணாமுல் காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பிற்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உருவானது. தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புனித நீராடி மகிழ்ந்தனர் :

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். புனித நன்னாளில் நீராடுவது பாவங்களைப் போக்கி ஆசீர்வாதங்களைத் தரும் என நம்பப்படுவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்தனர். அதிகாலை முதலே புனித நீராடிய பக்தர்கள் தொடர்ந்து அங்குள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
சணல் கிடங்கு ஆலையில் அதிகாலையில் தீ விபத்து :

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா பகுதியில் உள்ள சணல் கிடங்கு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு கிடங்கு முழுவதும் சேதமானது. அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜபல்பூர் படகு விபத்தில் 9பேர் உயிரிழப்பு :

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த படகு விபத்தில் 9பேர் உயிரிழந்த நிலையில், மாயமானவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். பார்க்கி அணையில் 29 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு அணையின் மையப்பகுதியில் சென்றபோது திடீரென புயலில் சிக்கி கவிழந்தது.
பயணிகள் தண்ணீரில் தத்தளித்த நிலையில், தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 16 பேரை பத்திரமாக மீட்டனர். இதில் ஒரு தாய் தனது நான்கு வயது மகனை இறுக்கிப் பிடித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.