Also Watch
Read this
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மூலம் இயக்குநராக நல்ல வரவேற்பைப் பெற்றவர் அபிஷன் ஜீவிந்த். தொடர்ந்து, வித் லவ் என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்து கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் நடிகர் சிவராஜ்குமாருக்கு மகனாக நடித்துவரும் நிலையில் அந்த படம் குறித்த சில தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், "இந்தப் படத்தை தொடங்கியபோது, யாரடி நீ மோகினி படத்தின் உணர்வில் 50 சதவீகிதம் எட்டினால் கூட அது எங்களுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்று நினைத்தோம். இது தந்தை - மகன் உறவை மையமாகக் கொண்ட அழகான எமோஷனல் டிராமா. அதே நேரத்தில், நகைச்சுவை, பாசம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுகள் சரியான விகிதத்தில் கலந்த ஒரு குடும்பப் படமாக உருவாகி வருகிறது" என்று தெரிவித்தார். மேலும், "இதுவரை 15 நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாகவும், சிவராஜ்குமார் சார் உடன் பணியாற்றுவது எனக்கு ஒரு மிகப்பெரிய கற்றல் அனுபவமாக அமைந்தது" என்று தெரிவித்து உள்ளார்.

மன்னிப்பு கேட்டேன்
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் 'லால் சலாம்' படம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், "லால் சலாம் திரைப்படம் திரையரங்கிலும், OTTயிலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், நான் Netflix நிறுவனத்திடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால், அதற்கு அவர்கள், "ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள்? இது உங்கள் படம் மட்டும் அல்ல. நாங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரின் படத்தை நம்பித் தான் இந்த ஒப்பந்தத்தை செய்தோம். படத்தில் ரஜினிகாந்த் சுமார் ஒரு மணி நேரம் வருகிறார்," என்று Netflix நிறுவனம் கூறியதாக விஷ்ணு விஷால் பேசியுள்ளார். மேலும், "இப்படியான பொறுப்புணர்வை OTT தளங்கள் மிகவும் மதிக்கின்றன" என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

யோகி பாபுவின் 300வது படத்தின் ரிலீஸ் தேதி
அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” திரைப்படம், வருகிற ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. யோகி பாபுவின் 300வது திரைப்படமாக உருவாகிவரும் இந்த படத்தில், ஒரு நடுத்தர வர்க்க இளைஞன் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்காக கடுமையாக உழைத்து ஒரு வாகனத்தை வாங்குகிறார். ஆனால், அந்த வாகனம் திருடப்பட்ட பிறகு, என்ன நடக்கிறது? என்பதை வைத்து நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் விறுவிறுப்பான கமர்ஷியல் திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது. ஏற்கெனவே, படத்தின் டீஸர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ரிலீஸ் தேதி வெளியாகியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஒரே வாரத்தில் ரூ.10 கோடி வசூல்
இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்துள்ள நூறு சாமி திரைப்படம் கடந்த ஜூன் 19ஆம் தேதி வெளியானது. பெண்களின் மறுமணம் குறித்த கருத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும் பேசியுள்ள இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் நல்ல வசூலை ஈட்டி உள்ளது. இதன்படி, வெளியான முதல் வார முடிவில் ரூ.10 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஐட்டம் சாங்-ன்னு சொல்லாதீங்க"
நடிகை தமன்னா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், "திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களை ஐட்டம் சாங் என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை, அந்த சொல் பெண்களுக்கு மரியாதைக்குரியது அல்ல" என்று தெரிவித்திருக்கிறார். மேலும், "ஒரு பாடலுக்காக நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதை ஐட்டம் என்று அழைப்பது அந்தப் பெண்ணின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை அல்ல" என தெரிவித்துள்ளார். தற்போது இந்த கருத்தை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

தொடர் வசூல் வேட்டையில் 'எங்கள் தங்கம்'
நடிகை சமந்தா தயாரித்து, நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படம் கடந்த ஜூன் 19ஆம் வெளியான நிலையில், முதல் நாளிலேயே உலகளவில் ரூ.10.70 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்த வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிலையில், 'எங்கள் தங்கம்' திரைப்படம் வெளியான 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, சமந்தாவின் 'எங்கள் தங்கம்' படம் வெளியான 7 நாட்களில் உலக அளவில் ரூ.60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி-3 உருவாகிறதா?
இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற 'பாகுபலி' படத்தின் மூன்றாவது பாகம் குறித்த எதிர்பார்ப்புகள் மீண்டும் எழுந்து வருகிறது. இந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஜூன் 26ம் தேதி வெளியான 'பாகுபலி: தி டார்ச்பியரர்' (Baahubali: The Torchbearer) என்ற ஆவணப்படத்தின் ஒரு வீடியோ கிளிப்பில், "உலகம் இன்னும் இதற்குத் தயாராக இருக்காது, ஆனால் பாகுபலி இருக்கும்" என்று நடிகர் ராணா டகுபதி கூறுகிறார். உடனே நடிகர் பிரபாஸ் தனது மூன்று விரல்களைக் காட்டி புன்னகைப்பது, 'பாகுபலி 3' (Baahubali 3) உருவாவதற்கான அறிகுறி தான் என்று ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. அதே மாதிரி, இந்த வீடியோவின் இறுதியில் "பாரம்பரியம் தொடர்கிறது!" என்ற வாசகமும் இடம் பெற்று உள்ளது. இதுகுறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாகுபலி 3 உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.