Also Watch
Read this
தமிழ்நாட்டில், 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைக்க ஏதுவாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட விவகாரத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகளை தயார் செய்வதற்கான டெண்டரை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தவெக கூட்டணியில் உள்ள கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டெண்டரை ரத்து செய்த அரசின் முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி தூய்மை பணி...
ஆவடி, ஒசூர், தாம்பரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, மற்றும் நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக, இந்த 12 மாநகராட்சிகளில் குப்பைகளை சேகரித்தல், குப்பையை கிடங்குகளுக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரி இருந்தது. இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் நோக்கி 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பேரணியாகச் சென்றனர்.

கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு
ஈரோடு, மதுரை மாநகராட்சியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், அரசின் இந்த முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இவ்வளவு ஏன்? தவெக கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்டக் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், அரசுத் துறையில் 5 வருடங்கள் ஒப்பந்த முறையில் பணி செய்திருந்தால் அவர்களுக்கு பணி நிரந்தரம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது 12 மாநகராட்சியை தனியார் வசம் அளிக்க முயற்சி செய்வது எந்தவகையில் நியாயம்? குப்பை அள்ளுபவர்களை குப்பையாகவே நடத்துவதா? இதுதான் சமூக நீதியா? தனியார் முதலாளிகள் சம்பாதிக்க தான் இந்த தனியார் மயமா? என கேள்வி எழுப்பினர்.

யாருக்குமே புரியவில்லையே?
ஏற்கெனவே ஒப்பந்தம் எடுத்துள்ள அவர்லேண்ட் நிறுவனத்தினர், தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது முதல் குப்பைகளை கணக்கு காட்டுவது வரை முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டிய நிலையில் மாற்றத்திற்கான அரசு என சொல்லிவிட்டு படிக்காத பாமர மக்களை வஞ்சிப்பதா? எனவும் கவலை தெரிவித்தனர். வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் தங்களுக்கு நல்லதே நடக்குமென்று தான் முதலமைச்சர் விஜய்க்கு ஓட்டு போட்டோம் என அப்பாவி போல் பேசிய பெண் தூய்மை பணியாளர்கள், தங்கள் கஷ்டம் யாருக்குமே புரியவில்லையே? எனவும் வேதனை தெரிவித்தனர்.

அதே கொடுமை...
அதேநேரம், தனியார் மயம் என்ற வார்த்தையே ஆத்திரத்தை ஏற்படுத்துவதாகவும், "திமுக ஆட்சியில் தான் இந்த கொடுமை என்றால் மீண்டும் அதே கொடுமையே தொடரப்போகிறது என்றால் எப்படி?" என ஆதங்கம் தெரிவித்தனர். "தீய சக்தி, தீய சக்தி என ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு பேசிவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்தபிறகு தொல்லைபடுத்துவதா?" எனவும் தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

டெண்டர் ரத்து, மகிழ்ச்சி
இப்படி பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு அலை மேலெழும்பிய நிலையில் 12 மாநகராட்சிகளிலும் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டரையே ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பலரது மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தூய்மை பணியாளர்கள் முதலமைச்சருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.