Also Watch
Read this
நட்புக்கும், உறவுக்கும் இலக்கணமாக அரசுப் பதவிகளை அள்ளிக் கொடுக்கும் முதல்வர் விஜய், மேடம் திரிஷாவை துணை முதலமைச்சராக அறிவித்தாலும் கூட ஜனநாயகத்தில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.

டெல்லி சிறப்பு பிரதிநிதி...
இதுகுறித்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது;
தமிழ்நாட்டிலே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை சாராத கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, தவெக அரசு நியமித்து இருக்கிறது. இதற்கு முன்பாக, தனக்கு ஜாதகத்தை கணித்து கூறும் பண்டிதரை, தனது அரசியல் ஆலோசகராக த.வெ.க அரசு நியமனம் செய்து, அதற்கு பிறகு கடும் விமர்சனங்கள் எழுந்த பிறகு, நியமனம் ரத்து செய்யப்பட்டது. ஒருவேளை எல்லோருக்கும் ஜாதகத்தை கணித்து கொடுக்கிற பண்டிட், தன்னுடைய ஜாதகத்தை சரியாக கணிக்க தவறினாரோ என்னவோ?

நட்புக்கு இலக்கணமாக...
அதற்குப் பிறகு, தன்னுடைய மேனேஜர் ஜெகதீஷ் பழனிச்சாமி, தன்னுடைய வியூக
வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை அதிகாரப்பூர்வமான பவர் சென்டராக வைத்துக் கொண்டார். அதிகாரப்பூர்வமான பவர் சென்டராக உள்ளவர்கள், முதல்வர் விஜயின் நட்புக்கு இலக்கணமாக இருப்பவர்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக புரிகிறது, தெரிகிறது.
ஒரு தமிழர் கிடைக்கவில்லையா?
தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்து விட்டால், ஏதோ தமிழ்நாடு தனது அப்பன் வீட்டு சொத்தாகவும், தாத்தா வீட்டு சொத்தாகவும் வந்து விடுகிறதோ என்று நினைக்கிறாரோ? முதல்வர் விஜய்க்கு ஐந்தாண்டுகளுக்கு தான் மக்கள், வாய்ப்பு வழங்கி உள்ளார்கள். அதுவும் நீங்கள் மெஜாரிட்டி இல்லாத ஒரு மைனாரிட்டி அரசாக இருந்து கொண்டு இப்படி தமிழகத்தின் எட்டு கோடி மக்களின் உரிமை காக்கும் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்கிற பெருமை வாய்ந்த இந்த பதவியை தன்னோடு பழகியவர்கள் என்கிற காரணத்தினாலே, திரைப்படங்களில் முக்கிய ரோல் தருவதைப் போல வழங்கப்பட்டுள்ளது, எட்டு கோடி தமிழர்களுடைய உரிமையை நிலைநாட்ட ஒரு தமிழர் கிடைக்கவில்லையா நம் முதல்வர் விஜய் அவர்களுக்கு?

திரிஷா துணை முதல்வராக...
ஒன்று புரிகிறது... விஜயை வைத்து வைத்து படம் எடுத்தவர்கள், தன் படத்தில் நடிப்பவருக்கு, மேனேஜராக இருந்தவர்களான ஜெகதீஷ் பழனிச்சாமி, ஜான் ஆரோக்கியசாமி, வெங்கட் நாராயணா இப்படி எல்லோருக்கும் அரசு பதவி வழங்கிய முதல்வர் விஜய் நட்புக்கும், உறவுக்கும் இலக்கணமாக இருக்கின்ற பிரபல திரைப்பட கதாநாயகியாக இருக்கிற மேடம் திரிஷாவிற்கு கூட துணை முதல்வராக்க, விரைவிலே அறிவிப்பு வெளிவரலாம். ஏனென்றால் ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம். முதல்வர் விஜய் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பை வெளியிடலாம் என்கிற அதிர்ச்சியிலே தமிழகம் உறைந்து போயிருக்கிறது.
இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.