Also Watch
Read this
அதிமுக அதிருப்தி அணிக்கு அமைச்சரவையில் இடம் தந்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வதாக, இடதுசாரிகள் உறுதியாக கூறி உள்ளன.
இடதுசாரிகள் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இடதுசாரி கட்சிகள் இன்று மே 20ஆம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், இ.கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பங்கேற்றனர்.
எரிபொருள் விலை உயர்வு
அப்போது சண்முகம் கூறியதாவது;
தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல், வணிக சிலிண்டர் விலை உயரும் என நாங்கள் கூறியபோது, அது வதந்தி என்று, பாஜக அமைச்சர்கள் கூறினர். ஆனால், தேர்தலுக்குப் பிறகு, எரிபொருள் விலைகளை இருமுறை உயர்த்தினர். விரைவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்படும். அத்தியாவசியப் பொருட்களான எரிபொருளை குறைவான விலையில், தட்டுப்பாடு இன்றி கிடைக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மிக அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.
வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு
தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்கவே முடிவெடுத்தோம். ஒருவேளை அமைச்சரவையில் பங்கேற்பது என்ற யோசனை இருந்தால், அதுபற்றி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியே முடிவு செய்யும். நிச்சயம் அவர்கள் எங்களுடன் கலந்து பேசுவார்கள்.
அதிமுகவினருக்கு பதவி கொடுத்தால்...
இடதுசாரிகள் எடுக்கும் நிலைப்பாட்டையே விசிக எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அமைச்சரவையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவோம் என்று, திருமாவளவன் முடிவு செய்தால் அது தவறானது கிடையாது. அமைச்சரவையில் அதிமுக அதிருப்தி அணி பங்கேற்றால் தவெக அரசுக்கு வழங்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்வோம்
இவ்வாறு சண்முகம் கூறினார்.
குடைச்சல் தர மாட்டோம்
இ.கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது;
தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் ஒரே நிலைப்பாட்டை எடுத்தோம். மக்கள் தீர்ப்பை மதித்து, மீண்டும் ஒரு தேர்தல் வரவேண்டாம், ஆளுநர் கையில் அதிகாரம் செல்லக்கூடாது என்ற அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். எங்கள் ஆதரவே அவர்களுக்கு போதும், வேறு தேவையில்லை. நாங்கள் வெளியில் இருந்தே தவெக ஆட்சியை ஆதரிக்கிறோம். நாங்கள் உழைக்கும் மக்கள், ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகளுக்காக எப்போதும் குரல் எழுப்புவோம். அரசுக்கு வேறு எந்த குடைச்சலும் தர மாட்டோம்.
இவ்வாறு வீரபாண்டியன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved